கர்நாடக கொடியில் ராகுல் படம்: கொதித்தெழுந்த கன்னட அமைப்புகள்.. பாரத் ஜோடா யாத்திரையில் புது சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு ஆதரவாக கர்நாடக கொடியில் ராகுல் காந்தி புகைப்பட்டம் வைக்கப்பட்டதற்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டு எனவும் கேட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை பேரணி என்ற பெயரில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்கினார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, கேரளாவில் 19 நாட்களை கடந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
சல்லி சல்லியா நொறுங்கிய கணக்கு! கடுப்பான எடப்பாடி & கோ! டெல்லியில் சாதித்த 'வாரிசு’! இங்கே எப்படி?
பிரம்மாண்ட வரவேற்பு
பாஜக ஆளும் மாநிலம் என்பதோடு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலும் கர்நாடகாவில் நடைபெற உள்ளதால் ராகுலின் இந்த யாத்திரை கர்நாடகாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தனது பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று மைசூருவில் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன்னிப்பு கோர வேண்டும்
பதாகைகள், கொடிகளுடன் காங்கிரசார் பாத யாத்திரையில் பங்கேற்க திரண்டு இருந்தனர். அப்போது ராகுல் காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருந்த கர்நாடக மாநிலக் கொடிகளையும் சிலர் ஏந்தியிருந்தனர். இதற்கு கன்னட ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு, ராகுல் காந்தி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்தான் வெட்கப்பட வேண்டும்
அதேபோல், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக்கும் ராகுல் காந்தியின் படம் கன்னட கொடியில் இடம் பெற்றது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''சித்தராமையா அதிகாரத்தில் இருந்த போது கர்நாடக கொடியில் மாற்றம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் கன்னடர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தற்போது ராகுல் காந்தியின் படம் கொடியில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்தான் வெட்கப்பட வேண்டும்'' என்றார்.
சோனியா காந்தி
முன்னதாக ராகுல் காந்தி நேற்று கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ராகுல் காந்தி மழையில் நனைந்து கொண்டு பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகின. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில் ஒருநாள் மட்டும் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.இதற்காக சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் நாளை கர்நாடக மாநிலம் வருகை தர உள்ளனர். வரும் 6 ஆம் தேதி பாரத் ஜோடா ரத யாத்திரையில் ராகுலுடன் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.