A டூ Z கமிஷன்.! பிரதமரும், முதல்வரும் வாய் திறப்பதில்லை.. ஏன் தெரியுமா! பாயிண்டை பிடித்த ராகுல்
பெங்களூர்: ராகுல் காந்தி இப்போது கர்நாடகாவில் நடைப்பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில், அம்மாநில அரசை அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் பாஜகவுக்கு எதிராகப் பொதுமக்களை ஒருங்கிணைக்கவும் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் செல்கிறார்.
இந்த பாத யாத்திரையை ஆகஸ்ட் 31ஆம் தேதி குமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதலில் சில நாட்கள் நடைப்பயணம் சென்ற ராகுல் காந்தி அடுத்து கேரளாவில் பாத யாத்திரை சென்றார்.
அப்புறம் ஏன் ஆ.ராசா, திருமா, சீமான் விளாசாமல் இருப்பாங்க? சின்மயா மிஷன் புத்தகத்தால் சர்ச்சை
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி மிகவும் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால் அங்கு அவர் 19 நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டார். இந்தச் சூழலில் அடுத்ததாக அவர் கர்நாடகாவில் பாத யாத்திரை ஆரம்பித்து உள்ளார். அங்கு மொத்தம் 21 நாட்கள் அவர் பாத யாத்திரையைத் தொடங்கி உள்ளார். கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அட்டாக்
இந்நிலையில், கர்நாடகாவின் காலலே கேட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பசவராஜ் பொம்மை அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "கர்நாடகாவில் அனைத்து அரசு ஒப்பந்தங்களுக்கும் 40% கமிஷன் கேட்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. அனைத்து ஒப்பந்ததாரர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். இதனால் அரசு ஒப்பந்தத்தை எடுப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்போது வரை இதில் எந்தவொரு தீர்வும் இல்லை.
நடவடிக்கை இல்லை
பிரதமர் மோடியும் கூட இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13000 பள்ளி சங்கங்களிடம் இருந்தும் கூட 40% கமிஷன் எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஊழல், உதவி பேராசிரியர் ஊழல் பல ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால், இதில் எந்த விவகாரத்திலும் யார் மீதும் நடவடிக்கை இல்லை. ஏனென்றால் கமிஷன் செல்வதே அவர்களுக்குத்தான்.
வேலைவாய்ப்பு
இங்குக் கர்நாடகாவில் வேலைவாய்ப்பு மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இளைஞர்களுக்கு எவ்வித வேலைகளும் கிடைப்பதில்லை. கர்நாடக அரசில் மட்டும் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்ப அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. வேலை கிடைக்காததால் இளைஞர்களின் வாழ்க்கையே வீணாகும் சூழல் உருவாகி உள்ளது" என்றார்.
பாத யாத்திரை
கடந்த மாதம் 31ஆம் தேதி இந்த பேரணி கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், இது காஷ்மீரில் நிறைவடைகிறது. மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக இந்த பாத யாத்திரை செல்லும் நிலையில், ராகுல் காந்தி 150 நாட்களுக்கு 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார். கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி மொத்தம் 21 நாட்கள் பாத யாத்திரை செல்வது குறிப்பிடத்தக்கது.