எடியூரப்பா முதல்வர் பதவிக்கு சிக்கல்?.. நெருக்கடி தரும் தேசிய தலைமை.. கர்நாடகாவில் என்ன நடக்கிறது?
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியதாகவும், இது தொடர்பாக சில முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதில் பாஜகவிற்கு சில சிக்கல்கள் இருக்கின்றன.
கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு இன்னும் முடிவு ஏற்பட்டது போல தெரியவில்லை. அங்கு பாஜகவில் நிலவி வரும் கோஷ்டி மோதல் காரணமாக முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமோ என்ற கேள்விகள், விவாதங்கள் எழுந்துள்ளது.
24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவின் ஆட்சி முறை பிடிக்கவில்லை, அவர் எம்எல்ஏக்களை அணுகும் விதம் சரியில்லை, அவர் எடுக்கும் முடிவுகள் சரியில்லை என்று கட்சிக்கு உள்ளேயே சில முக்கிய நிர்வாகிகள் எடியூரப்பாவிற்கு எதிர்த்து தெரிவித்து உள்ளனர்.
எதிர்ப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடியூரப்பா சரியாக எடுக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து எடியூரப்பா மீது புகார் வைத்து வருகிறார்கள். கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வரா மற்றும் ஹூப்ளி மேற்கு எம்.எல்.ஏ., அரவிந்த் நேராக டெல்லிக்கே சென்று இது பற்றி பாஜக தலைமையிடம் புகார் வைத்தனர். எடியூரப்பா தொடர்பாக பலர் டெல்லி தலைமையிடம் புகார் அளித்து வருகிறார்கள்.
என்ன பேசினார்கள்
கட்சியில் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில், டெல்லி மேலிடம் என்னை நம்பி எனக்கு முதல்வர் பதவியை தந்து உள்ளது. அவர்கள் என்னை பதவி விலக சொன்னால் நான் விலக தயார். அவர்கள் எடுக்கும் முடிவை நான் பின்பற்ற தயார் என்று எடியூரப்பா குறிப்பிட்டு இருந்தார். எடியூரப்பா இப்படி வெளிப்படையாக பதவி விலக ரெடி என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் உண்மையில் பதவி விலகும் முடிவில் இல்லை என்கிறார்கள்.
பதவி விலகல்
நான் முழுமையாக ஆட்சியில் இருந்துவிட்டதான் செல்வேன் , பாதியில் பதவி விலக மாட்டேன் என்று எடியூரப்பாகி உறுதியாக இருக்கிறாராம். ஆனால் எடியூரப்பா மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட புகார்கள் காரணமாக அவரை பதவி விலக சொல்லும் முடிவில் பாஜக தேசிய தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி மேலிடத்தில் இருந்து அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
நெருக்கடி
எடியூரப்பாவை பதவி விலகும்படி டெல்லி தலைமை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் எடியூரப்பாவை மாற்றும் அளவிற்கு கர்நாடக பாஜகவில் வலுவான தலைவர் இல்லாததால், எடியூரப்பா மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாமல் பாஜக தேசிய தலைமை திணறி வருகிறது. கர்நாடகாவில் எடியூரப்பா இல்லாமல், பாஜக இல்லை என்ற நிலை உள்ளதால், அதன் தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கலாம் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.
புகார்
கர்நாடகாவில் பாஜக கட்சியில் இருக்கும் சில எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட எடியூரப்பாவிற்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் கர்நாடக பாஜகவின் பொறுப்பாளர் அருண் சிங் அடுத்த வாரம் பெங்களூர் வந்து நேரடியாக அதிருப்தி தலைவர்களிடம் பேச உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் டெல்லி தலைமைக்கு அவர் கர்நாடக நிலவரம் குறித்து ரிப்போர்ட் அளிக்க உள்ளார்.
ரிப்போர்ட்
இவர் அளிக்கும் ரிப்போர்ட்டை பொறுத்துதான் எடியூரப்பாவின் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள். எடியூரப்பாவிற்கு தேசிய தலைமை நெருக்கடி கொடுத்தாலும் ஒரு பக்கம் எம்எல்ஏக்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எடியூரப்பாவிற்கு 65 எம்எல்ஏக்களுக்கும் அதிகமான ஆதரவு உள்ளது என்று ஹொன்னஹள்ளி பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார். அவர்கள் கையெழுத்து போட்ட கடிதம் உள்ளதும் என்றும் ரேணுகாச்சார்யா குறிப்பிட்டு இருந்தார்.
என்ன நடக்கும்
இதனால்தான் பாஜக தேசிய தலைமை விரைவில் முடிவு எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் அருண் சிங் வந்த பின் இதில் முக்கிய டிவிஸ்ட் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அளிக்கும் ரிப்போர்ட்டை பொறுத்து எடியூரப்பா பதவியில் நீடிப்பதும், பதவியில் இருந்து ராஜினாமா செய்வதும் நடக்கும் என்கிறார்கள்.