ஃப்ரீசார்ஜ் வாலட்டை அதிக தொகை கொடுத்து வாங்கிய ஆக்சிஸ் வங்கி! பேடிஎம் ஆப்புக்கு சவால்
மும்பை: சொத்து மதிப்பில் இந்தியாவின் 7வது பெரிய வங்கியான ஆக்சிஸ், செல்போன் வாலட் செயலியான, ஃப்ரீசார்ஜ்-ஜை (FreeCharge) 60.04 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது. ஸ்நாப் டீல் நிறுவனத்திடமிருந்து ஃப்ரீசார்ஜ், ஆக்சிஸ் வங்கி நிறுவனத்திற்கு கை மாறுகிறது.
மிகப்பெரிய போட்டி நிறுவனமான பிளிப்கார்ட்டுன் ஸ்நாப்டீல் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஃப்ரீசார்ஜ்-ஜை ஆக்சிசுக்கு ஸ்நாப் டீல் விற்றுள்ளது.
ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை ஸ்நாப்டீல் 2015ல் வாங்கியிருந்தது. இப்போது அதில் 200 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்த்து ஆக்சிஸ் வங்கி வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி நிதித்துறை தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் இன்று நிருபர்களிடம் இதை தெரிவித்தார்.
ஆக்சிஸ் வங்கி சார்பில் ஏற்கனவே உள்ள வாலட்டுடன் இணைக்கப்படுமா அல்லது, தனியாகவே இயக்கப்படுமா என்பது இனிதான் முடிவு செய்யப்பட உள்ளது.
ஃப்ரீசார்ஜ்குக்கு இந்தியாவில் 54 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதேநேரம் அலிபாபா நிறுவனத்தின் பேடிஎம் ஆப் 225 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வாலட் செயலியாக உள்ளது.