ரூபாய் நோட்டு வாபசால் தடுமாறிய தங்க இறக்குமதி... 2016ல் 21% சரிந்தது
உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பு, ரூபாய் நோட்டு வாபஸ் இந்தியாவின் தங்க இறக்குமதியை சரிவடைய செய்துள்ளது. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 21 சதவ
டெல்லி: இந்தியாவின் தங்கத்தின் தேவை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. 2016ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை 21 சதவீதம் சரிந்து 676 டன்னாக உள்ளது.
உலக அளவில் தங்கம் இறக்குமதியிலும், ஆபரண விற்பனையிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தைவிட, விற்பனை செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகமாக உள்ளது. தங்கத்தின் தேவை அதிகம் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகமாக தங்க நுகர்வோர்கள் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக ஆயிரம் டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை 857.20 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தங்கத்தின் தேவை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டை விட 148.3 டன் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக உலக தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டில் 675.5 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21% குறைவாகும். தங்கத்தின் நுகர்வும், மக்களின் தங்களை நகை வாங்கும் ஆர்வமும் குறைந்து போனதற்கு பல காரணங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை தங்க இறக்குமதி குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இறக்குமதி அதிகரித்தது. ஆனால் டிசம்பர் மாதம் பணத்தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் தங்க இறக்குமதி குறைந்துள்ளது.
நகைக்கடைக்காரர்கள் வேலை நிறுத்தம்
தங்க நகை துறை சந்தித்த நெருக்கடிகளும் தங்கத்தின் தேவை குறைவதற்கு காரணமாக இருந்துள்ளன. 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சதவீத உற்பத்தி வரியை திரும்ப பெறக்கோரி நகை வியாபாரிகள் 18 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பு தங்க நகை வாங்குவதற்கு பான் கார்டு தேவை மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்றவை தங்கத்தின் தேவை குறைய காரணமாக இருந்துள்ளன.
தேவை குறைய காரணம்
குறிப்பாக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்கிற அறிவிப்பு, தங்க நகை மீதான உற்பத்தி வரி, பண மதிப்பு நீக்கம், தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் தேவை குறைந்ததாக உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
சற்றே உயர்ந்த நகை விற்பனை
இது போன்ற காரணங்கள் தங்கத்தின் தேவையை மட்டும் பாதிக்கவில்லை, பொதுவான வர்த்தகம் மற்றும் வாங்கும் நடவடிக்கைகளில் சிக்கலை உருவாக்கியுள்ளன என்று கூறியுள்ளார். 2016ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை தொடர்ச்சியாக சரிந்து வந்தாலும், நான்காவது காலாண்டில் 3 சதவீதம் அதிகரித்து 244 டன்னாக இருந்தது.
தங்கத்தின் விலை சற்றே சரிந்ததும், தீபாவளி மற்றும் திருமண காலம் வந்த போது 3 சதவீதம் உயர்ந்தது.
நிலைமை சரியாகும்
பண மதிப்பு நீக்கத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி சரிந்திருப்பது தற்காலிகமானது என்று கூறியுள்ள உலக தங்க கவுன்சில் நிர்வாகி, விரைவில் நிலைமை சீராகி விடும் என்று நம்பிக்கக தெரிவித்துள்ளது. தங்கத்தை மறுசுழற்சி செய்வது 2016ம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 89.6 டன்னாக உள்ளது. இது 2015ம் ஆண்டில் 80.2 டன்னாக இருந்தது. நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் 2017ஆம் ஆண்டில் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.