ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30, 2019 வரை நீடிப்பு
ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2019 வரை தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு, ஆடிட் அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2019 வரை தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. முதல் நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு தாக்கலை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கும் நிறுவனங்கள் ஆண்டு வரித்தாக்கலுடன், ஆடிட் அறிக்கைகளும் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி ஆகிய படிவங்களை தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு அனைத்து இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்தது. தேவையான படிவங்களை ஜிஎஸ்டி இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2019ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய ரிட்டன் படிவம் தாக்கல் செய்யலாம். ஜூலை 1 முதல் கண்டிப்பாக படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.