கடலைமிட்டாய், ஊறுகாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி - கவலையில் தயாரிப்பாளர்கள்
கடலை மிட்டாய்க்கும், ஊறுகாய்க்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது தான் குடிசை தொழில் போல செய்யும் உற்பத்தியாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: ஒரே தேசம் ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரி அமலாக உள்ளது. குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்க்கும், ஊறுகாய்க்கும் 18% ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி பற்றிதான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளது. நீங்க நல்லவரா? கெட்டவரா? ஜிஎஸ்டி ஹீரோவா? வில்லனா? என்ற விவாதங்கள் சூடு பறக்கின்றன.
ஜிஎஸ்டியால் வரி விதிப்பால் பல சிறு தொழில்கள் பாதிப்பிற்குள்ளாகும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
18 சதவிகித வரி விதிப்பால் குடிசை தொழிலாக உள்ள கடலை மிட்டாய், ஊறுகாய் அதிகம் பாதிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.
கடலை மிட்டாய்
எத்தனையோ மிட்டாய்கள் வந்தாலும், இன்றைக்கும் கடலை மிட்டாய்க்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. புரதச்சத்து நிறைந்த கடலை மிட்டாயை எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு உண்ணத் தரலாம்.
குடிசைத் தொழில்
தென் மாவட்டங்களில் கடலை மிட்டாய் குடிசை தொழிலாக தயாரிக்கப்படுகிறது. கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டியில் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. எனவே கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அல்லது 5% வரி மட்டுமே விதிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.
ஊறுகாய் ஜிஎஸ்டி வரி
ஊறுகாய்க்கு தமிழர்கள் அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றனர். தமிழக அரசு 50 கிராமுக்குக் கீழே உள்ள ஊறுகாய்ப் பொட்டலங்களுக்கு வரிவிலக்கு கொடுத்திருந்தது. 50 கிராமுக்கு மேலே இருக்கக்கூடிய பாட்டில்கள் மற்றும் கண்டெய்னர்களுக்கு 5 சதவிகித வரியே விதித்திருந்தது. இப்போது ஜிஎஸ்டியில் ஊறுகாய்க்கு18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
குடிசை தொழில் பாதிப்பு
தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ஊறுகாய் உள்ளிட்ட சிறு தொழில்களை நம்பி வாழும் பல கோடிப் பேர் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பெரிய நிறுவனங்களோடு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாது எனவே 18 சதவிகித ஜிஎஸ்டி வரியால் குடிசைத்தொழிலாக செய்யும் ஊறுகாய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.