புதிய வரி விதிப்பு அமல்: இன்று முதல் விலை உயரும் பொருட்கள் எவை, எவை தெரியுமா?
சென்னை: பட்ஜெட் தாக்கலின்போது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் எந்தெந்த பொருட்கள், சேவைகளின் விலை உயர்ந்துள்ளது என தெரிந்து கொள்வது நல்லது.
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை காக்க புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் கிரிஷி கல்யாண் செஸ் என்ற கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
15 சதவீத வரி
ஏற்கனவே 14.5 சதவீதமாக இருந்த சேவை வரியுடன் 0.50 சதவீத கிரிஷி கல்யாண் செஸ் வரியும் சேர்ந்து 15 சதவீதம் வரி வசூல் செய்யப்படும். அதனால் இன்றில் இருந்து மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
செல்போன்
தற்போது அனைவரிடமும் செல்போன் உள்ளது. செல்போன் இல்லாத ஆட்களே இல்லை. இந்நிலையில் செல்போன் பயன்படுத்துவோர் செலுத்தும் கட்டணத்துடன் கூடுதலாக 15 சதவீத வரி கட்ட வேண்டும்.
ஹோட்டல்
அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் இன்றில் இருந்து ஹோட்டல் பில் உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 15 சதவீத சேவை வரி செலுத்த வேண்டுமே.
சிகரெட்
புகையிலை பொருட்கள் மீது 15 சதவீதம் வரை கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதால் சிகரெட், புகையிலை, சுருட்டு ஆகியவற்றின் விலை இன்று அதிகரித்துள்ளது.
விமான பயணம்
விமான பயணம், ரெடிமேட் ஆடைகள், ரூ.1,000க்கு மேற்பட்ட பிராண்டட் உடைகள், மினரல் வாட்டர், ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வாங்கும் பொருட்கள், சேவைகள், அலுமினியம் பாயில், பிளாஸ்டிக் பைகள், கேபிள் கார் பயணம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளன.
பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ்
இறக்குமதி செய்யப்படும் கவரிங் நகைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், சட்ட சேவை, லாட்டரி டிக்கெட்டுகள், பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ், இறக்குமதி செய்யப்படும் கோல்ப் கார்கள், தங்கக் கட்டிகளின் விலையும் அதிகரித்துள்ளன.