புதிய, பழைய 10 ரூபாய் நாணயங்கள் தடை செய்யப்படவில்லை - ரிசர்வ் வங்கி மீண்டும் விளக்கம்
புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் தடையோ, ரத்தோ செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: பத்து ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது.
இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி விளக்கம்
புதிய வடிவமைப்புடன் 10 ரூபாய் நாணயங்கள் வெளிவந்திருக்கும் நிலையிலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இரண்டுமே செல்லும்
கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்.
ரூபாய் குறியீடு
இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.
பத்து ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்படவில்லை
புதிதாக வெளியிடப்பட்டுள்ள பழைய 10 ரூபாய் நாணயங்கள் காரணமாக பழைய 10 ரூபாய் நாணயங்கள் தடை செய்யப்படவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தயங்கவோ கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.