பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு எத்தனை கோடி தெரியுமா?
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவுக்காகக் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1,484 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர் நான்காண்டுகளில் ரூ. 1,484 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், பிரதமரின் இந்த அரசு முறைப் பயணம் பல நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பல்வேறு நாடுகளுக்கு நட்பு ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள் பெறவும் இந்த பயணங்கள் உதவியதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
மோடியின் வெளிநாட்டு விமான பயண செலவு குறித்து மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
2014 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் 42 முறை வெளிநாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சுமார் 84 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
2015- 2016 ஆம் ஆண்டுகளில் 24 நாடுகளுக்கும், 2016- 2017 ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 19 நாடுகளுக்குப் பிரதமர் சென்று வந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு, முதன்முதலில் பூட்டான் சென்றது முதல் 13 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் 10 நாடுகளுக்குச் சென்ற பிரதமர், கடைசியாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமரின் இந்த வெளிநாட்டுப் பயணத்துக்காக விமான பராமரிப்புச் செலவுக்கு மட்டும் ரூ.1088.42 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்த வகையில் ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, விமானத்தில் ஹாட்லைன் தொடர்புக்காக மொத்தம் ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான பயணத்தில் ஹாட்லைன் தொடர்புக்கான செலவு மற்றும் 2018-19 ஆண்டுக்கான விமான செலவுகள் குறித்துக் கணக்கிடப்படவில்லை.
2014-15ஆம் ஆண்டு ரூ.93.76 கோடியும், 2015-16ஆம் ஆண்டு ரூ.117 கோடியும் 2016-17ஆம் ஆண்டு ரூ.76.27 கோடியும், 2017-18ஆம் ஆண்டு ரூ.99.32 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அரசு முறைப் பயணம் பல நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தியுள்ளது என்று வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் தான் பிரதமாராக பதவியேற்ற காலத்தில் இருந்து, மக்களை கவனிக்காமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ள பயணச் செலவானது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.