இந்திய ஐடி கம்பெனிகளுக்கு அமெரிக்காவில் பிரகாசமான எதிர்காலம்-விஷால் சிக்கா நம்பிக்கை
இந்திய ஐடி கம்பெனிகளுக்கு அமெரிக்காவில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் இன்போஃசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷால் சிக்கா கூறியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அரசாங்கம் புதுமையான வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு அமெரிக்காவில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் இன்போஃசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷால் சிக்கா நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின்பு, பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கான ஹெச்1-பி விசா பெறும் நடைமுறையில் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் இந்திய ஐடி கம்பெனிகள் ஹெச்-1பி விசா பெறுவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தகுதியான நபர்கள் இந்தியாவிலிருந்து செல்வதில் சுனக்கம் ஏற்பட்டது.
டிரம்பின் நடவடிக்கையால், இந்திய பங்குச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அமெரிக்க ஐடி நிறுவனங்களும் கடும் சிக்கல்களை சந்தித்தன.
இதனை அறிந்தே டிரம்ப் கடந்த மாதம், திறமையான நபர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்ற அறிவித்தார்.
பிரதமர் மோடியும் தற்போது தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஹெச்-1பி விசா நடைமுடை தொடர்பாக டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்போஃஸிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான விஷால் சிக்கா சமீபத்தில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தொழில்துறைக்கு ஏற்ற நிர்வாகமாகவும், சவால் நிறைந்ததாக இருப்பதாகவும் கூறினார்.
இருந்தாலும், டிரம்ப்பின் நிர்வாகத்தில், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகவும் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இருந்தாலும், அந்த சவால்களையும் நாங்கள் புதுமையான வேலைக்கான ஒரு வாய்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம் என்றார்.
கூடுதலாக, எதிர்காலத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்றால், நாம் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து மாற்றங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும், மென்பொருள் தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்காக திறமையான கட்டமைப்பதன் மூலம் நாம் இதனை புரிந்து கொள்ளவும் முடியும் என்றும்,
அவ்வாறு செய்தால் எதிர்காலத்திற்கு நாம் மிகவும் பொருத்தமாக இருப்போம் என்றும் நாம் முன்னேற முடியும் என்று நான் உறுதியாக நம்புவதாகவும், இன்போஸிஸ் நிறுவனமும் அதையை தேர்ந்தெடுத்து செய்வதாகவும் விஷால் சிக்கா கூறினார்.