ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன தடுமாற்றம் எதிரொலி: வேறு நிறுவனங்களில் வேலை தேடும் பைலட்டுகள்
மும்பை: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதிரடியாக 1861 விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில் அதன் விமானிகள் இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகியற்றில்
குறைந்த கட்டணத்தில் விமான சேவை நடத்துவதாக கூறி ஆஃபர்களை அறிவித்து கவனம் ஈர்த்தது, கலாநிதி மாறனின், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான சேவையில் 1861 விமானங்களை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 8ம்தேதி முதல் டிசம்பர் 31ம்தேதி வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என்று ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் இருந்து கிளம்பும் 302 விமானங்கள் ரத்தாகியுள்ளன. நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சிவ் கபூர் கூறுகையில், "இது செய்தி இல்லை. பரபரப்பான தலைப்பு செய்தி. சராசரியாக நாள் ஒன்றுக்கு 70 விமானங்களை பட்டியலில் இறுந்து நீக்கியுள்ளோம். ஆனால் மொத்தமாக 1861 விமானங்கள் என்று சொல்லும்போது அது பெரிய செய்தியாக தெரியும்" என்றார்.
ஸ்பைஸ் ஜெட் தனது சேவையை குறைத்துக் கொண்டதற்கு மறு கட்டமைப்பு பணிகள் என்று காரணம் கூறினாலும், நஷ்டத்தின் காரணமாகவே அந்த நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. எனவே பங்கு சந்தையின் ஸ்பைஸ் ஜெட் பங்குகளின் விலைகள் கிடுகிடுவென குறைந்தன.
இதனிடையே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 125 பைலட்டுகள் ராஜினாமா செய்துள்ளனர். அதில் 54 பைலட்டுகள் வேறு நிறுவனங்களில் வேலை தேடி விண்ணப்பித்துள்ளனர்.
40 பேர் ஜெட் ஏர்வேசிலும், மற்றவர்கள் இண்டிகோ விமான நிறுவனத்திலும் பணிக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.