அணி திரண்ட சீக்கிய மாணவர்கள்.. பஞ்சாப் பல்கலையில் பிபிசி ஆவணப்படம்! புரட்சி என ஆம் ஆத்மி பாராட்டு
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு தடை செய்த பிபிசி ஆவணப்படத்தை 400 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் பஞ்சாப் மாணவர்கள் சங்கத்தினர் திரையிட்டு உள்ளனர்.
சண்டிகர்: கடந்த 2002 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்தில் வெடித்த கலவரம் தொடர்பாக பிபிசி 2 பாகங்களாக தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ள நிலையில், தடையை மீறி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 400 க்கும் மேற்பட்டோர் மத்தியில் மாணவர்கள் சங்கத்தினர் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு உள்ளனர்.
இந்த கலவரத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறி தி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது பிரட்டனை சேர்ந்த பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி.
2 பாகங்களாக வெளியிடப்பட்டு உள்ள பிபிசியின் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை மீறி கல்லூரிகள், பொது இடங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவல்துறை அனுமதியுடன் சென்னையில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்! வள்ளுவர் கோட்டத்தில் பார்த்த மக்கள்
பிபிசி ஆவணப்படம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி இதனை திரையிட்டனர். இதனை தடுக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மின்சாரம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் அனுமதியுடன் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பஞ்சாப் பல்கலைக்கழகம்
இந்த நிலையில் தற்பொது பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டு உள்ளார்கள். பஞ்சாப் மாநில பாட்டியாலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தடையை மீறி மாணவர்கள் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு உள்ளனர். நேற்று பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு வெளியே திரண்ட ஏராளமான மாணவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டு பார்த்தனர்.
எதிர்ப்புகள் இல்லை
மத்திய அரசின் தடையை தொடர்ந்து இதை திரையிட்ட மாணவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்ட நிலையில், தாங்கள் இதை திரையிடப்போவதாக பஞ்சாப் மாணவர்கள் சங்கம் அறிவித்து மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதனால் மாணவர் சங்கங்களிடையே மோதல் வெடிக்கும் என காவல்துறை அஞ்சிய நிலையில் எந்த எதிர்ப்பும் இன்றி திரையிடப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம்
அதேபோல் பல்கலைக்கழக நிர்வாகமும் இதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இதுபோல் திரையிடுவதற்கும், நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒத்துழைப்புடனே இது திரையிடப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு மாணவர்கள் கண்டனம்
இதுகுறித்து பஞ்சாப் மாணவர் சங்க தலைவர் அமந்தீப் சிங் தெரிவிக்கையில், "நாங்கள் வெற்றிகரமாக மத்திய அரசுக்கு எதிராக பிபிசி ஆவணப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட்டு உள்ளோம். அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு குரல்களை ஒடுக்கி வருகிறார்கள். இந்த தடை என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தடை. எங்களுக்கு மற்ற மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆம் ஆத்மி பாராட்டு
இதற்காக திரைகள், புரொஜெக்டர்களை ஏற்பாடு செய்து மாணவர்களை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தோம். குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு தொடர்பான பிபிசியின் ஆவணப் படத்தை பார்க்க 400 க்கும் அதிகமான மாணவர்கள் திரண்டு வந்தனர். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த செயல் புரட்சிகரமானது ஆம் ஆத்மி கட்சி பாராட்டு தெரிவித்து இருக்கிறது.