சபாஷ்! சரியான முடிவு.. பஞ்சாப் காங். தோல்விக்கு பின்.. என்ன நவ்ஜோத் சிங் சித்து இப்படி சொல்கிறாரே!
சண்டிகர்: ‛‛பஞ்சாப்பில் புதிய அரசியல் முறையை கொண்டு வரும் பொதுமக்களின் சிறந்த முடிவுக்கு வாழ்த்துக்கள் '' என காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். மாநிலத்தில் ஆட்சியமைக்க அவர் ஆளுநரிடம் உரிமை கோர உள்ளார்.
மக்களின் சிறந்த முடிவு
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறும்போது, ‛‛ பஞ்சாப்பில் புதிய அரசியல் முறையை கொண்டு வரும் பொதுமக்களின் சிறந்த முடிவுக்கு வாழ்த்துக்கள்'' என்றார். இதையடுத்து காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு இப்படி கூறுகிறீர்களே என கேட்டதற்கு, ‛‛ இதில் தவறு எதுவும் இல்லை. மக்களின் முடிவு எப்போதும் தவறாக இருக்காது. மக்களின் முடிவு என்பது கடவுளின் முடிவாகும். இதை நாம் புரிந்து கொண்டு தலைவணங்கி ஏற்று கொள்ள வேண்டும்'' என்றார்.
கவலையில்லயா...
மேலும் தேர்தல் தோல்வி குறித்து கவலையில்லா உங்களுக்கு என கேட்டதற்கு, அவர் "ஒரு யோகி அறப்போராட்டத்தில் ஈடுபடும்போது, அவர் எல்லா உறவுகளையும் துண்டித்து அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக மாறுவார். மேலும் மரணத்தை சந்திக்கவும் அஞ்சமாட்டார். நான் தற்போது பஞ்சாபில் இருக்கிறேன். இங்கேயே தான் இருப்பேன். ஒருவர் உயர்ந்த குறிக்கோளுடன் பஞ்சாப் மீது அன்பு வைத்திருந்தால் தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படமாட்டார். நான் அப்படிப்பட்டவன். பஞ்சாப் மக்களுடனான எனது உறவு எல்லைகளற்றது. இது இதயப்பூர்வமானது. மக்களுடனான எனது உறவு தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. நான் பஞ்சாப் மக்களிடம் கடவுளையும், அவர்களது நலனில் என் நலனையும் காண்கிறேன்'' என்றார்.
ஆம்ஆத்மியிடம் வீழ்ச்சி
நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் ஜீவன்ஜ்யோத் கவுரிடம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் நவ்ஜோத் சிங் சித்து தோ்வியடைந்தார். இந்த தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்து 32,929 வாக்குகளும், ஜீவன்ஜ்யோத் கவுர் 39,520 வாக்குகளும் பெற்றார். மேலும் தேர்தல் தோல்வியால் அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
பாஜக டூ காங்கிரஸ்
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் கால்பதித்த இவர் கடந்த 3 முறை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 2017 சட்டசபை தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் அம்ரீந்தர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டதோடு, காங்கிரஸ் கட்சியில் குழப்பம் உருவானது. பின்னர் அம்ரீந்தர் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவிக்கும் என நினைத்தார். ஆனால் ராகுல்காந்தி சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அவர் தலைமையில் தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது. முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது.