1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் லீவு... மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு
மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை நாளை முதல் ஜூன் 12ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுமே ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் பழையபடி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியிலிருந்து பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட்டன. மேலும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ஆம் தேதியும் பொதுத் தேர்வு ஆரம்பமாகியிருக்கிறது.
மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தற்போது மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். மே 31ஆம் தேதியுடன் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைய உள்ளன.
Recommended Video
1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதனால் மே 14ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வகுப்பு ஆசிரியர்கள் கட்டாயமாக மே 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த மே 20 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை சரி பார்க்கும் பணி நடக்க இருக்கிறது எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications