10.5% இடஒதுக்கீடு ரத்து.. ஸ்டாலினுடன், பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு.. முதல்வர் அளித்த நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த இடஒதுக்கீடு தொடருமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சில வன்னிய அமைப்புகள் உற்சாகம் அடைந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை டாக்டர் ராமதாஸ் பாராட்டி தள்ளினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்?

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக எழுப்பிய 7 கேள்விகளுக்கும் அரசின் விளக்கம் போதுமானதாக இல்லை'' என்று நீதிபதிகள் கருத்து கூறினார்கள். இதனால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னிய அமைப்புகள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றனர்.
Recommended Video

டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை
பலதரப்பட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உயர் நீதிமன்ற மதுரை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உறுதி அளித்தார். ''உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முறையான நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி
இந்த நிலையில் வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் பா.ம.க நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகிய இருவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications