எழுச்சியுடன் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்:வர்ணாசிரம சனாதன தர்மத்தை வேரறுக்க தமிழக தலைவர்கள் உறுதி!
சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Recommended Video
தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தமது சமூக வலைதளப் பக்கங்களில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் - இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும். சமூகம் - சட்டம் - கல்வி - பொருளாதாரம் - அரசியல் - வரலாறு - தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இத்துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் மட்டுமல்ல, இத்துறைகளின் திசைகளைத் திருப்பியவரும் அவரே. ஒரு மனிதர் இவ்வளவு படிக்க முடியுமா, இவ்வளவு எழுத முடியுமா, இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா, இந்தளவுக்கு உறுதியைக் கடைப்பிடிக்க முடியுமா, இவ்வளவு போராட முடியுமா என்று சிந்தித்தால் அதிலும் தலைசிறந்த இடம் பிடிக்கக் கூடியவர் அம்பேத்கர் அவர்கள்.
|
ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டி
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது. சட்டம் என்பதற்கும் மேலாக 'மிகச்சிறந்த சமூக ஆவணம்' எனப் பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணம்.
சிதைக்க பாஜக முயற்சி
அனைத்து மக்களுக்கும் சட்ட உரிமையை நிலைநாட்டக் காரணமாக அது அமைந்துள்ளது. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பைச் சிதைக்க இன்றைய பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை அவர்களால் அசைக்க முடியவில்லை.
கருணாநிதி- அம்பேத்கர்
''டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது" என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், ''எனக்குத் தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்" என்று சொன்னார்கள். அத்தகைய மாமேதையின் நினைவாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி அமைத்தவர் கருணாநிதி. அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவியும், அம்பேத்கர் பெயரால் விருதும் வழங்கினார்கள். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைச் சிறப்புற நடத்தினார்கள்.
அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதி மொழி
அம்பேத்கர் அவர்களும், திராவிட இயக்கத்தின் வழிகாட்டியாகவே போற்றப்பட்டு வருகிறார். ''அரசியலில் கலந்து கொள்ளுங்கள். ஒரு சமூகத்தின் வலிமை அதன் விழிப்புணர்வு, கல்வி, சுயமரியாதை ஆகியவற்றில்தான் இருக்கிறது" என்றார் அவர். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். ''விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்" என்றார் அவர். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்! இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் வைகோ
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார்.
சிங்கங்களாக இருப்போம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் வைகோ கூறியதாவது: வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆதிக்க கோட்டையை உடைத்தெறிந்தவர் அம்பேத்கர். ஆடுகள்தான் வெட்டப்படுகின்றன சிங்கங்கள் அல்ல என்று அம்பேத்கர் கூறியுள்ளார். மக்களை ஆடுகளாக இருக்கக்கூடாது என்றும், சிங்கங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் இன்று இந்தியாவில் மக்களை ஆடுகள் ஆக்குகின்ற, சனாதனவாதிகளின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார்.
மதுரையில் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மதுரை மாநாகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும். அது தான் எங்கள் நோக்கம். அம்பேத்கரின் 130 வது பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபை யிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஒரே தேசம் ஒரே கோட்பாடு என சனதான சக்திகள் செயல்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இதற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.
கமல்ஹாசன் ட்வீட்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மநீம தலைவர் கமல் வெளியிட்ட ட்வீட்: அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்' என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்.
தினகரன் ட்விட்டர் பதிவு
அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் ட்விட்டர் பதிவு: ந்திய அரசியல் சாசன சிற்பி, எல்லோரும் சம உரிமை பெற பாடுபட்ட போராளி, சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை பிறந்தநாளில் போற்றிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்வோம்.
ஜிகே வாசன், ஜான் பாண்டியன், வானதி
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னையில் கொட்டும் மழையில் புரட்சியாளர் அம்பேத்கர், எம்.ஜி்.ஆர். சிலைக்கு அமைச்சர் பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் முழு திரு உருவ சிலைக்கு பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்தார்.