ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மிக கனமழை
வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அக்டோபர் 10ஆம் தேதியே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகியுள்ளது . வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - ஒடிசா நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, அண்ணா நகர், மாம்பலம், புரசைவாக்கம் உள்ளிட்ட தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. சென்னையை ஒட்டியுள்ள வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போன்ற இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,சேலம், ஈரோடு ,திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி ,தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும். தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அந்த வகையில் தமிழகம் அதிக மழையை பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக தொடங்கக்கூடிய அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் முன்னதாக கணித்துள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications