நயன்தாரா அவமதிப்பு.. திமுகவின் “ஆக்ஷன்” -அடைக்கலம் தந்த பாஜக! ராதாரவி, துரைசாமிக்கு உள்ள 2 ஒற்றுமை
சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருக்கும் நடிகர் ராதா ரவிக்கும் இருக்கும் ஒற்றுமையை பார்ப்போம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சில வாரங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்த தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக புகைப்படத்துடன் வெளியிட்டார். அதில் இருவரும் 2 குழந்தைகளின் பாதங்களையும் பிடித்தபடி இருந்தனர்.
ஜாமினில் வெளியே வந்த நடிகர் அர்ணவ் வெளியிட்ட பதிவு... இந்த நிலையிலும் இப்படியா பேசுவாங்க!
வாடகை தாய்
இதற்கிடையே நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர்.
விசாரணை
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தியது.
விதிமீறவில்லை
அண்மையில் இந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியானது. அதில், "நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறலில் ஈடுபடவில்லை. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிகளின்படியே வாடகைத் தாய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வி.பி.துரைசாமி
இந்த நிலையில் சென்னையில் அண்மையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, "நான் 1972 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் இருக்கிறேன். அப்போது இங்கு வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று டூலட் போர்டு தொங்கும். ஆனால் இன்று நுங்கம்பாக்கம் பக்கம் சென்றால் வாடகைத் தாய் கிடைக்கும் என்று போடப்பட்டுடு உள்ளது.
இரட்டை அர்த்தம்
தமிழ்நாடு எவ்வளவு பெரிய திராவிட மாடல் பாருங்க. எவ்வளவு பெரிய புரட்சி செய்து இருக்கிறது. வாடகைக்கு வீடு என்பதை காட்டிலும் வாடகை தாய் இவ்விடத்தில் கிடைக்கும் என்பதுதான் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது பெரிய மருத்துவமனை. நடிகை நயன்தாராவுக்கு... இப்படி சொல்வதற்கு பதில் 9 தாரா என்றே தமிழில் சொல்லிவிடலாம்." என்று இரட்டை அர்த்தத்தில் அவர் பேச மேடையில் அவரோடு நின்றவர்கள் சிரித்தார்கள்.
நடிகர் ராதாரவி
வி.பி.துரைசாமியின் இந்த பேச்சை விமர்சிக்கும் அதே வேளையில் பாஜகவை சேர்ந்த நடிகர் ராதாரவிக்கும் இவருக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று இருவரும் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள். மற்றொன்று இருவருமே நடிகை நயன்தாரா குறித்து தரக்குறைவாக பொது இடத்தில் விமர்சித்தவர்கள்.
2019 பேச்சு
கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ராதாரவி திமுகவில் இருந்தபோது, நயன்தாரா நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நயன்தாரா பற்றி தரக்குறைவாக பேசினார். "நயன்தாரா ஒருபக்கம் பேயாகவும் நடிக்கிறார். மறுபக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட கே.ஆர்.விஜயாவைதான் அழைப்பார்கள். இப்போது கும்பிடுபவர்களும் சாமி வேஷம் போடலாம். கூப்பிடுபவர்களும் சாமி வேஷம் போடலாம்." என்று விமர்சித்தார்.
நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்
ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. நயன்தாராவில் கணவர் விக்னேஷ் சிவன், விஷால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்று எச்சரித்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.
வரவேற்ற பாஜக
ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே ராதாரவி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நயன்தாரா குறித்து தகாத முறையில் பேசியவரை பாஜகவில் இணைப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். நயன்தாராவை இழிவாக பேசியதற்காக திமுகவில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பாஜகவில் இணைந்த ராதாரவிக்கும், திமுகவிருந்து விலகி பாஜகவில் இணைந்து நயன்தாராவை இரட்டை அர்த்தத்தில் விமர்சித்துள்ள துரைசாமிக்கும் உள்ள 2 ஒற்றுமை இதுதான்.