கணினி வழி வாடகை வசூல் "இதுவரை ரூ.200 கோடி" எந்த கோயிலில் அதிகம் தெரியுமா?- சேகர்பாபு வெளியிட்ட தகவல்
சென்னை : இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் செய்யப்படும் முறையில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் செய்யப்படும் முறை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு:
சிதம்பரம் நடராஜர் கோவில்..இரண்டு நாட்கள் மக்கள் கருத்து கேட்கும் இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி கடந்த அக்டோபர் 8ஆம் தேதி கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. நவம்பர் 1 முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.
பசலி ஆண்டு
நடப்பு பசலி ஆண்டான 1431, 1.7.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.6.2022 அன்றுடன் முடிவடைகிறது. இந்த பசலியில் துறை நடவடிக்கையால் 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை-1 ரூ.30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்கள் வாரியாக
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.6.29 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி கோவிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி கோவிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
வசதிகளை மேம்படுத்த
அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.