26 + 13.. "டீல் ஓகே"?.. இத்தனை சீட்டுகளா.. மேஜர் ரோலில் டிடிவி தினகரன்.. அவங்களுக்கு "ஆப்பு" ரெடியாமே
எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறாரா
சென்னை: எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என்று அறுதியிட்டு சொன்னதையடுத்து, ஒரு சில யூகமான தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அதன்படி, பாஜக - அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு மற்றும் சீட் ஒதுக்கீடு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது..!!
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.
விக்டர் நாம கெத்துதான? 'முக்கிய பதவி’.. டெல்லியில் பலம் பெறுகிறாரா எடப்பாடி? பாஜகவின் அதிரடி மூவ்!
கிலி கலக்கம்
கடந்த வாரம் நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, மெகா கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றார்.. எந்த கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி இப்படி பேசினார் என்பதே பலரது ஆர்வமாக எழுந்து வருகிறது.. பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கும், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள்..
13 + 26 ஓகே
இப்படிப்பட்ட சூழலில் முக்கிய தகவல் ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது.. பாஜக + அதிமுக தரப்பில் தொகுதி பேரத்தை முடித்து விட்டதாக சொல்கிறார்கள்.. அதாவது, அதிமுக தரப்புக்கு 26 இடங்களும், பாஜக தரப்புக்கு 13 இடங்களும் என முடிவாகிவிட்டதாக ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. சீட்கள் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தொகுதிகள் குறித்து மட்டுமே முடிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், அநேகமாக அமித்ஷா, மோடி சென்னை வரும்போது இதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பப்படுகிறது.
ஹேப்பி ஷேரிங்
அதாவது, ஒதுக்கப்படும் 13 சீட்களை, கூட்டணிக்கு கொண்டு வரக்கூடிய கட்சிகளுடன் பாஜக பகிர்ந்து கொள்ள வேண்டும், அதேபோல, கூட்டணிக்குள் கொண்டுவர கட்சிகளுடன் அந்த 26 சீட்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கூட்டணியின் நிலைப்பாடாக உள்ளதாம்.. கூட்டணி பலத்துக்காக மட்டுமே டிடிவியை பாஜக உள்ளே கொண்டு வர பார்க்கிறது என்றாலும், வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக இருப்பதால், அதற்கான சமாதான பேச்சுவார்த்தையும் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். இப்படி கூட்டணி + சீட் விவகாரங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வரும்நிலையில், இன்னொரு யூகமான தகவலும் கசிகிறது.
சுழலும் டவுட்
அதன்படி, பாஜகவுடன் எடப்பாடி இணக்கமாக செல்வாரா? அல்லது எதிர்ப்பு மனநிலையை கையில் எடுப்பாரா? அல்லது எடப்பாடி தங்கள் பேச்சுக்கு ஒத்துவராத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, புதுஅணியை பாஜக உருவாக்க முயலுமா? அல்லது பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி கூட்டணி வைப்பாரா? என்ற பல சந்தேகங்கள் கிளப்பிவிடப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு தனியார் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், எடப்பாடி மீதான பாஜகவின் நம்பிக்கை குறித்து தன் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
தினகரன் டீல்
மணி அதில் சொல்லும்போது, "அதிமுக 3 ஆக பிரிந்து கிடக்கிறது.. எடப்பாடி + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் என்று 3 ஆகி உள்ளது.. முதலில் அதிமுகவுக்கு தலைவனாக தன்னை எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்தி கொள்ளட்டும், மெகா கூட்டணியா? இல்லையா? என்பது பிறகு பார்த்துக்கலாம்.. அதிமுகவையே ஒற்றுமைப்படுத்த எடப்பாடி பழனிசாமி, அவர் தலைமையிலான மெகா கூட்டணியை எப்படி அமைப்பார்? ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தபோது, எடப்பாடிக்கு தந்த அதே மரியாதையை, தேர்தல் நேரத்தில் பாஜக தருமா என்பது தெரியாது.. எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி என்று அண்ணாமலை சொல்கிறாரே? அப்படியானால் ஓபிஎஸ் கதி? மோடி சொன்னதால்தான், கட்சியில் சேர்ந்தேன், பதவியை ஏற்றுக் கொண்டே என்று ஓபிஎஸ் சொன்னாரே?
ஈஸியா
தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவது கைவந்த கலை என்பதை, அண்ணாமலை மீண்டும் நிரூபித்துள்ளார்.. தன்னுடைய தலைமையில் மெகா கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்கிறார் எடப்பாடி.. ஆனால், ஓபிஎஸ்ஸை தூக்கி தூரப்போட்டுவிட்டு, அவ்வளவு சுலபமாக எடப்பாடியுடன் பாஜக பயணிக்குமா? என்பது சந்தேகம். டிடிவியுடன் முன்பே எடப்பாடி கூட்டணி வைத்திருக்கலாம்.. தன்னை ஒரு ஜெயலலிதாவாக எடப்பாடி நினைத்துக் கொள்கிறார்.. அதுதான் அவரது பிரச்சனையே.. தன்னை யாருமே எதிர்க்கக்கூடாது என்று நினைக்கிறார்.. இதுவும் அவர் தவறுதான்.. காரணம், அவர் ஜெயலலிதா கிடையாது. தனித்துவம் மிக்க தலைவர் கிடையாது.. பலரையம் அரவணைத்து போகும் தலைவர்தான்.
ஆப்பு ரெடி
ஒன்றாக சேர்ந்து இருங்கள் என்று சொன்னது ஒரு தப்பா? இவர் என்ன எம்ஜிஆரா? ஜெயலலிதாவா? 75 இடங்களில் வெற்றி பெற்றீர்கள். உண்மைதான்.. ஆனால் அது கூட்டு முயற்சி.. இன்னைக்கு கட்சியை ஓபிஎஸ் உடைத்து கொண்டிருக்கிறாரே? ஓபிஎஸ்ஸால் வெற்றி பெற முடியாதுதான்.. அதற்கான ஆதரவும் அவருக்கு இல்லைதான்.. ஆனால், நிச்சயம் 23, 30 தொகுதிகளில் எடப்பாடி செல்வாக்கை காலி செய்வார். தன்னை முதல்வராக்கின சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.. இறங்கிவந்து கூட்டணிக்கு தயார் என்று சொன்ன டிடிவி தினகரனையும் தூக்கியடிச்சிட்டார்.. கூடவே நின்று எல்லாவற்றுக்கும் தோளோடு தோள் சேர்த்து நின்ற ஓபிஎஸ்ஸுக்கும் ஆப்பு வெச்சிட்டாரு.. எல்லாருக்கும் ஆப்பு வெச்ச எடப்பாடி, பாஜகவுக்கும் ஆப்பு வெக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அவர் வரலாறை எடுத்துக் கொண்டாலே துரோகம்தானே' என்று கருத்து கூறியுள்ளார்.
ஷேரிங் சீட்
மணி சொன்ன இதே கருத்தைதான், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. "எடப்பாடி சொல்வதுபோல, மெகா கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்பது உண்மைதான்.. ஆனால், அந்த கூட்டணியில் எடப்பாடி இருப்பாரா? என்பதுதான் விஷயமே.. பதவியில்லாத பழனிசாமியாக மாற போகிறார், பார்த்துக் கொண்டே இருங்கள்" என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஆக, தேர்தல் பங்கீடுகள், சீட் விவகாரங்கள் என சில விஷயங்கள் யூகமாக சுற்றிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான நம்பகத்தன்மையும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது களத்தை மீண்டும் உஷ்ணமாக்கி வருகிறது.. பார்ப்போம்..