அயர்லாந்திலிருந்து வந்து விருகம்பாக்கம் முழுவதும் சுற்றிய கொரோனா இளைஞர்.. ஆடியோவில் பெண் பகீர்
சென்னை: அயர்லாந்திலிருந்து விருகம்பாக்கம் வந்த 21 வயது மாணவர் அந்த பகுதி முழுவதும் சுற்றியது தெரியவந்துள்ளது. எனவே விருகம்பாக்கத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என பெண் ஒருவர் ஆடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது.
அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு சரியாகிவிட்ட நிலையில் இன்னும் இருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை
இந்த நிலையில் அயர்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு 21 வயது மாணவர் கடந்த 17-ஆம் தேதி வந்தார்.

சொர்னாம்பிகை
அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு 18-ஆம் தேதி முதல் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவராகவே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த இளைஞர் விருகம்பாக்கம் சொர்னாம்பிகை நகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வெளியே போக வேண்டாம்
இது தொடர்பாக ஒரு ஆடியோவில் பெண் ஒருவர் கூறுகையில் அயர்லாந்திலிருந்து வந்த ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸார் விருகம்பாக்கத்திற்கு வந்து குடியிருப்புவாசிகளை தனிமைப்படுத்தியுள்ளனர். வெளியே எங்கும் போக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இரு தினங்கள்
குடியிருப்பை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அந்த இளைஞர் அயர்லாந்திலிருந்து வந்து குடியிருப்பு, ஏரியா முழுவதும் கடந்த இரு தினங்களாக சுற்றியுள்ளார். எனவே யாரும் எங்கள் பகுதிக்கு வந்துவிடாதீங்க. எல்லாருடைய ரத்த மாதிரிகளையும் எடுத்து சென்றனர் என அந்த பெண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications