தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை - டெல்டா, கடலூருக்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது.
தீபாவளி தினமான இன்றைய தினம் காலை முதலே பல ஊர்களில் மழை பெய்து வருகிறது. மழையோடு மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிக கனமழை - டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
ஆரஞ்ச் அலர்ட்
வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர் ,பெரம்பலூர், கடலூர், சேலம்,திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
5ஆம் தேதி மஞ்சள் அலர்ட்
நாளை டெல்டா மாவட்டங்கள் ,கடலூர்,சேலம், ஈரோடு ,நீலகிரி,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
இடி மின்னலுடன் கனமழை
6ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர் ,சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
7ஆம் தேதி கனமழை
7ஆம் தேதி கிருஷ்ணகிரி ,ஈரோடு ,சேலம் ,தருமபுரி ,திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை , விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
8ஆம் தேதி இடி மின்னலுடன் கனமழை
8ம் தேதி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை ,மதுரை ,விருதுநகர் ,தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சூறாவளிக்காற்று வீசும்
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் 6ம் தேதி வரை கேரள கடலோர பகுதிகளில் லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் நாளை முதல் 7ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 8ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.