பிசுபிசுத்த தனியார் பள்ளிகளின் போராட்டம்! 91 % இயங்கின! மூடப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை பாயுமா..?
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இன்று 91% சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின எனவும், செயல்படாத பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.
இதுமட்டும் இன்றி பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீசி தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாணவி உயிரிழப்பு
காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், அதே நேரத்தில் பள்ளியை பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் சேதப்படுத்தியதை ஏற்று கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்ததோடு, இன்று தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என அதிரடியாக அறிவித்தனர்.

தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், தன்னிச்சையாக விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து சில தனியார் பள்ளி அமைப்புகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் எனவும், அதே நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர், ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என அறிவித்தனர்.

தமிழக அரசு எச்சரிக்கை
தமிழக அரசின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அளித்த தகவல்களின் படி 91 சதவீதம் பள்ளிகள் இன்று இயங்கியதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. ஒருசில பள்ளிகளில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு காரணமாக பராமரிப்பு பணிகள் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், சில பள்ளிகளில் மழை காரனமாக விடுமுறை அளிக்கப்பட்டதாக பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில் இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இன்று 91% சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின எனவும், செயல்படாத பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதனால் அரசு விதிமுறையை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications