17 வயது சிறுமி மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் தானா? அதிர வைத்த கஞ்சா கும்பலின் பின்னணி! அதிர்ந்த சென்னை!
சென்னை : சென்னை தாம்பரம் அருகே கஞ்சா வியாபாரி வீட்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்ட 17 வயது சிறுமி பல நாட்களாக கஞ்சா கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2..O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது செய்து வருகின்றனர்.
கஞ்சா கும்பல்
இந்நிலையில் சென்னை பள்ளிகரணை அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வடக்குப்பட்டு பகுதியில் சோதனை செய்ததில் ஒரு வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெடிகுண்டு
விசாரணையில் அவர்கள் பள்ளிகரணையை சேர்ந்த ஹரிபிரசாத்(32), யுவராஜ்(30), நாகராஜ்(28), திருவண்ணாமலையை சேர்ந்த பாரதி, மாடம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி ராஜன், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(33), என்பதும் தெரியவந்தது. இருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி தான் நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
17 வயது சிறுமி
மதுவிலக்கு போலீசார் இவர்களை சேலையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் ஆயுததடைச்சட்டம், கஞ்சா வழக்கு, நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு 17 வயது சிறுமியை வாங்கி கடத்தி வந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதிர்ச்சி
அவர்கள் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது அந்த வீட்டில் தன்னை அடைத்து வைத்து வீட்டு வேலைகள் செய்ய சொன்னதோடு தினமும் இரவு நேரங்களில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.