அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரிய டிராபிக் ராமசாமி மனு ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் படி, ஒருவர் இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது;
சூரப்பா கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐ.ஐ.டி-யில் இயக்குனராக பதவி வகித்துள்ளார்; 2016 -2017ல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார் என சுட்டிக்காட்டி இருந்தார்.
ஐ.ஐ.டி. இயக்குனர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது; அந்த அடிப்படையில் ஏற்கனவே இரு முறை பதவி வகித்துள்ள சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு விரோதமானது எனவும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய பெஞ்ச், ஐ ஐ டி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.