சூரியனோடு கைகோர்க்கும் மய்யம்! திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வர தயாராக இருக்கிறார்! அவரே சொல்லிட்டாரே!
சென்னை : மக்களுக்காக தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வரை பார்த்து எதிரணியினர் திமுக கூட்டணிக்கு வருவார்கள் எனவும், அந்த வகையில் நடிகர் கமலஹாசனும் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார்.
பாஜகவிடம் இருந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிக்க இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே இது சாத்தியம் எனக் கூறப்படும் நிலையில் அவரது பயணம் தேசிய கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார்.

திமுக கூட்டணி
இதேபோல அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி
இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல் பங்கேற்கவுள்ளதும், எனது பாதை எந்த கூட்டணியை நோக்கி செல்கிறது என்பதை பார்த்தால் உங்களுக்கே தெரியும் என அவர் கூறியது திமுக-காங் கூட்டணியில் மய்யமும் இணைய இருப்பதையே காட்டுகிறது என சொல்லப்படுகிறது. பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியால் துவண்டு போய் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் திமுகவை பொருத்தவரை மென்மையான போக்கையே கையாண்டு வருகிறது.

கமல்ஹாசன்
இதுவரை கூட்டணி பற்றி பேசி இருக்காத கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாகி கூட்டத்தில் பேசிய போது கட்சியை பலப்படுத்துங்கள் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசியதாக தகவல் வெளியாகின. இதனால் திமுக கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் கட்சி இணையலாம் என யூகங்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது தொடர்ந்து திமுக அரசை பாராட்டுவது, கூட்டணி அமையலாம் எனக் கூறுவது போன்ற கமல்ஹாசனின் நடவடிக்கைகள் திமுக - காங் கூட்டணியில் அவர் இணைவதற்கான சிக்னல்களே என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

திமுக கூட்டணி
இந்நிலையில் மக்களுக்காக தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வரை பார்த்து எதிரணியினர் திமுக கூட்டணிக்கு வருவார்கள் எனவும், அந்த வகையில் நடிகர் கமலஹாசனும் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்,"ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு பிரபலங்களுடன் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொள்வது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதல்வர் ஸ்டாலினை தனது சொந்த அண்ணன் போல நினைக்கிறார்.

வாய்ப்புகள் அதிகம்
இந்த கூட்டணி இயற்கையானது. எனவே கமலுடன் தனி கூட்டணி அமைப்பது குறித்த எண்ணம் இல்லை. ஒரு சதவீத வாக்குகள் கூட மிக முக்கியம். தமிழக முதலமைச்சர் தூக்கம் இல்லாமல் தமிழக மக்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். பலரும் திமுக கூட்டணிக்கு வர தயார்.அந்த வகையில் கமலஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வர தயாராக இருப்பார்" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் திமுக மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய சாத்திய கூறுகள் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications