நீட் தேர்வு ஒரு சமூக அநீதி.. ஏழைகள் கனவில் தீ வைக்கிறார்கள்.. புகார் சொல்ல வாங்க.. சூர்யா ஆவேசம்
சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் புகார் அளிக்க பொது மக்களுக்கு நடிகர் சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வு சமூக அநீதி என்றும், ஏழை மாணவர்கள் கனவில் தீ வைக்கப்பட்டுள்ளது என்றும், தனது அறிக்கையில், சூர்யா ஆவேசம் காண்பித்துள்ளார்.
Recommended Video
ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் 'நீட்' தேர்வு- இப்படி ஒரு தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதை பாருங்கள்:
அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு 'கல்வியே ஆயுதம்', ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற குழ்நிலையில், தகுதியைத் தீர்மாளிக்க 'ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது.
12 வருடம் படித்த பிறகும் ஒரு தேர்வா தீர்மானிப்பது
எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.
மருத்துவ கனவில் தீ வைத்துள்ளார்கள்
'நீட் நுழைவுத்தேர்வு' வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.
நாங்க சொல்லிட்டோம், அப்போ நீங்க
தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு 'நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.
மக்களே பதிவு செய்யுங்கள்
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, 'நீட் தேர்வின்' பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், [email protected] எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கல்வி மாநில உரிமை
இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தர தீர்வு: 'கல்வி மாநில உரிமை' என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.