மானம்கெட்ட பிழைப்பு.. பெண்களை தண்டிப்பது உங்க அரசியலா? காயத்ரிக்கு ஆதரவாக பாஜக மீது கஸ்தூரி அட்டாக்
சென்னை: பெண்ணிடம் தவறாக பேசியவரை விட்டுவிட்டு, பெண்களை நீக்குவதுதான் உங்கள் அரசியல் என்றால் இதைவிட மானம்கெட்ட பிழைப்பு உலகில் வேறெங்கும் இல்லை என நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.
திமுக மூத்த நிர்வாகியும் ராஜ்ய சபா உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவருக்கு ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவியை வழங்கி கவுரவித்தது மாநில பாஜக தலைமை.
40 இடங்களில் வருமான வரித்துறை 'ரெய்டு'.. ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு செக்!
டெய்சியுடன் மோதல்
சூர்யா சிவாவுக்கும் பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சியில் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக டெய்சியிடம் செல்போனில் தொடர்புகொண்ட சூர்யா சிவா, அவர் மீது அவதூறு பரப்பும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் பேசி உள்ளார்.
மோடி, அமித்ஷா பெயர்
இந்த உரையாடலில் ஆவேசமாக பேசும் சூர்யா சிவா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரது பெயர்களை பயன்படுத்தி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
காயத்ரி ரகுராம்
தனியார் ஊடகத்தில் வெளியான இந்த ஆடியோவை பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமும் பகிர்ந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலை நடவடிக்கை
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அண்ணாமலை நேற்று 2 அறிக்கைகளை வெளியிட்டார். தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
சூர்யா சிவா மீது விசாரணை
அதேபோல் சூர்யா சிவா விவகாரத்தில், "பாஜக திருமதி டெய்சி சரண், திரு சூர்யா சிவா அவர்கள் இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சம்பவத்தை விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்று அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார்.
கஸ்தூரி பதிவு
இந்த நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி, பீப் இல்லாத ஆடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, "அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம்; நட்டா, மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ; *** பதவி வாங்கின உனக்கே திமிருன்னா... என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும்; பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை.
2 மாத பழைய ஆடியோ
2 மாதம் பழைய ஆடியோவில் திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபான்மை அணித் தலைவரை கொலை மிரட்டல் விடுப்பதுடன், பாலியல் அச்சுறுத்தலையும் விடுக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, ஜேபி நட்டா, அண்ணாமலை யாருமே தப்பவில்லை. ஆடியோ வெளியானதில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேசியதற்காக காயத்ரி ரகுராம் தண்டிக்கப்பட்டு உள்ளார். சூர்யா மென்மையாக விடப்பட்டு விட்டார்.