உங்கள் ஆபிஸ்ல டீ, காப்பி குடுக்குற வேலை இருந்தா கொடுங்க.. ஆங்கரிடம் கேட்ட சத்யராஜ் பட காமெடி நடிகை
சென்னை: சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கு. கட்சியில் என்னை விரட்டுறாங்க, சினிமாவில் நல்ல நிலையில் இருப்பவர்களும் உதவவில்லை என நடிகை வாசுகி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
1990 களில் காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் போன்று கலக்கியவர் நடிகை வாசுகி. இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் ரிக்ஷா மாமா படத்தில் செய்த காமெடியை இன்று வரை அனைவரும் ரசிப்பார்கள்.
அந்த படத்தில் அவர் பேங்க் ஆபிஸர் என கூறி எந்த ரிக்ஷாவில் ஏறுவது என யோசிப்பார். அப்போது கவுண்டமணி தனது ரிக்ஷாவில்தான் ஃபேன் வசதி உள்பட டீலக்ஸ் ரிக்ஷா என கூறி வாசுகியை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்வார்.
எடப்பாடி வீசிய 6 சரவெடிகள்.. ஒரே பாயிண்டில் பதிலடி தந்த ஓபிஎஸ்.. கோர்டில் நடந்தது என்ன? பின்னணி!
ரிக்ஷா மாமா
கூலிங்கிளாஸ், குடை, ஹேண்ட் பேக் என ஹேண்ட்சம்மாக இருந்த வாசுகியை பார்த்த கவுண்டமணி அவரை வங்கி வாசலில் இறக்கிவிடுவார். இதனால் அவர் வங்கி அதிகாரி என நினைத்து இறுதியில் அவர் பிச்சைக்காரி என்று தெரியவரும். இதனிடையே கவுண்டமணிக்கு பிச்சைக்காரிதான் கிடைப்பார் என கிளி ஜோசியம் சொல்லும் பாண்டு கூற அதற்கு கவுண்டமணி பிச்சைக்காரின்னா சொன்னே எனக்கு பேங்க்காரி கிடைச்சிருக்கா என்பார்.
22 ஆண்டுகள்
இப்படி அனைவரையும் சிரிக்க வைத்த வாசுகிக்கு பட வாய்ப்புகள் வராததால் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவர் 22 ஆண்டுகாலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இவர் தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லை என நெஞ்சை உருக்கும் ஒரு பேட்டியை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளிக்கையில் நான் 22 ஆண்டுகள் அதிமுகவில் இருந்தேன்.
ஜெயலலிதா
இங்கு பொதுக் கூட்டம் நடந்தால் அங்கு போய் பேசுவேன். அப்போது காசு கொடுப்பார்கள். அதை வைத்து வாழ்க்கையை ஓட்டி வந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சார்பில் எந்த கூட்டமும் நடத்தவில்லை. இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒரு முறை எனக்கு பிறந்தநாள். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸிடம் வாழ்த்து பெற பொக்கேவுடன் சென்றேன்.
பொக்கேயுடன் போனேன்
பொக்கேவை வாங்கி வைத்துக் கொண்ட உதவியாளர்கள் அவர்களை நேரில் சந்திக்க என்னை அலைக்கழித்தார். ஏதோ பிறந்தநாள் என்றால் அவர்களால் முடிந்த பணத்தை கொடுப்பார்கள், அதை வைத்து ஒரு வேளை சாப்பிடலாம் என எண்ணிதான் அவர்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் 3 நாட்களாக நடையாய் நடந்தும் என்னை சந்திக்க விடவே இல்லை.
வெறுப்பு
இதனால் வெறுத்துபோய் பாஜகவில் இணைந்தேன். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். ரூ 10 ஆயிரம் கொடுத்தார்கள். அண்ணாமலையை புகழ்ந்து பேசினேன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினேன்.
பாஜகவில் இணைப்பு
பாஜகவில் இணைந்து எனக்கு காசு கிடைக்கவில்லை. ஒரு முறை எனது கர்ப்பப்பை எடுத்துவிட்டார்கள். நான் போய் ஒரு தலைவரிடம் அண்ணே எனது கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள், செலவுக்கு ஏதாவது காசு கொடுங்கள் என கேட்டேன். அதற்கு எல்லார் முன்னிலையிலும் என்னை விரட்டி அடித்தார். எனக்கு அவமானமாக இருந்தது. வேறு யாராவது இருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள்.
சோற்றுக்கு கஷ்டம்
ஆனால் நான் சோற்றுக்கு கஷ்டப்பட்டாலும் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். எனக்கு கல்யாணம் ஆகவில்லை, எனது குடும்பத்தாரும் என்னை புறக்கணித்துவிட்டார்கள். என்னிடம் காசு இருந்த போது அதை வைத்து கொண்டாடிய சொந்தபந்தம் எல்லாம் இன்று ஒரு வாய் சாப்பாடு போட யோசிக்கிறார்கள். உங்கள் ஆபிஸ்ல டீ, காபி கொடுக்குற வேலை இருந்தால் கொடுங்கள் நான் செய்யறேன், எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றார். இவரது இந்த பேட்டி பலரின் மனதை சோகத்தில் ஆழ்த்தியது.