அமமுக – அதிமுக இணைந்தால் திமுகவிற்கு கடும் சவால்.. கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
Recommended Video
சென்னை: கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது அதிமுகவும், அமமுகவும் இணையும்பட்சத்தில் அது திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது, ஆளும்கட்சியினர் பாஜக அடிமைகளாக உள்ளார்கள் என்ற விமர்சனங்கள் எழாத திசைகளே இல்லை என்னும் அளவுக்கு அரசின் அத்தனை செயல்பாடுகளும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த விமர்சனத்தில் உண்மை இல்லாமலும் இல்லை.
தமிழக நலன்களை விட்டு கொடுத்ததாக இருக்கட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் இன்றைய தேதி வரை குடியரசுத் தலைவர் மேஜைக்கு செல்லாதவரை எண்ணற்றவற்றை எடுத்துரைக்க முடியும்.
இப்படியாக அனைத்திலும் விமர்சனங்களை சந்தித்து வருவதால் ஆளும் கட்சி உள்ளாட்சித் தேர்தலை கூட சந்திக்க தயங்குகிறது. நாளும் பொழுதும் அதற்கு ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு வருகிறது.
தேர்தல் ஆணையம்
நீதிமன்றம் எத்தனையோ தடவை குட்டியும் இன்னமும் உள்ளாட்சி தேர்தல் நடந்தபாடில்லை. தேர்தல் ஆணையம் இடைதேர்தல் அறிவித்தாலும் மழை வருகிறது, புயல் வருகிறது என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறது ஆளும் அரசு. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தேர்தலைக் கூட திமுக உட்பட எதிர்கட்சிகள் எதிர்த்தாலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். ஆனால் ஆளும் கட்சி இடைதேர்தல் நடத்த இது தகுந்த நேரம் இல்லையென்று கடிதம் எழுதியதோடு வேட்பாளர் அறிவிப்பையும் தள்ளிப் போடுவது போல காட்டி தேர்தல் ரத்து அறிவிப்பு வந்ததும் உள்ளூர மகிழ்ந்து கொண்டது. இது அத்தனைக்கும் காரணம் தோல்வி பயம். தேர்தலை சந்தித்தால் மக்கள் நம்மை ஆதரிக்க மாட்டார்களோ என்ற நியாயமான ஐயப்பாடு ஆள்வோர் மனதில் இருக்கிறது என்பது தெளிவு.
பிற கட்சிகளுக்கு இடம் இல்லை
இந்நிலையில் எப்படியும் இவர்களோடு கூட்டணி வைத்து விடுவது என்று ஒற்றைக்காலில் ஒரு தேசியக் கட்சி தவம் இருக்க வருகின்ற கருத்துக் கணிப்புகளும் அதிமுகவுக்கு வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாக கூறவில்லை. பிரபல ஆங்கில செய்திநிறுவனமான டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும். பிற கட்சிகளுக்கு இடம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக இடைதேர்தல்
மறுபக்கம், தமிழகத்தில் இடைதேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் 20 தொகுதிகளில் தந்தி டி வி நடத்திய கருத்து கணிப்புகள் கூட அதிமுக பல்வேறு இடங்களில் உயிப்போடு இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட தங்க தமிழ் செல்வனின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் அமமுக -க்கு 30% அதிமுகவுக்கு 30% திமுக கூட்டணிக்கு 31% கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் அமமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்தால் அவர்களுக்கு மட்டும் 60% கிடைத்து விடுகிறது. இப்படியாக அவர்கள் நடத்திய 20 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகளும் இப்படித்தான் உள்ளது. ஆகவே அதிமுக, அம்முக ஒன்றினையும் பட்சத்தில் இன்றைய நிலவரப்படி திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.
அமமுக தொண்டர்கள்
அமமுக- வில் இருக்கின்ற தொண்டர்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதாலும் OPS-EPS ஆகியோரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களும் தற்போது அமமுகவின் அடைக்கலம் ஆகியுள்ளனர். அதோடு அமமுகவில் இவர்களோடு திமுக உட்பட வேறு சில கட்சிகளில் இருந்தும் அம்முகவில் சிலர் இணைந்திருப்பதால் அமமுகவின் பலம் கொஞ்சம் அதிகரித்துள்ளது . இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு அம்சம் ஆளும்கட்சி மீதான அவநம்பிக்கை, வெறுப்பு, எதிர்ப்புணர்வு போன்றவை இருந்தாலும் திமுக மீது அல்லது ஸ்டாலின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை அல்லது அபிமானம் இருக்கிறதா என்றால் இன்னும் முழுமை அடையவில்லை என்றே இப்போதைக்கு கூற தோன்றுகிறது.
வாக்கு சதவீதம்
ஆக வரும் நாட்களில் ஸ்டாலின் உழைப்போ அல்லது அதிமுகவின் யுக்திகள் கூட வாக்குகளின் சதவீதத்தை மாற்ற கூடும். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் இப்போது அவர்களுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் வெகுவாக குறையவே வாய்ப்புள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழக மக்களுக்கு அதிமுக மீது இருக்கும் வெறுப்பை விட பாஜக மீது கடும் வெறுப்பு உள்ளது. ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவை அவர்கள் கைப்பாவையாக பாஜகவினர் பயன்படுத்துகின்றனர் என்பது மக்கள் மனதில் ஆளப் பதிந்து போன ஒரு கருத்தாக உள்ளது. அப்படி ஒரு பார்வையில் அதிமுகவினர் மீது மக்களின் அனுதாப பார்வை உள்ளது.
இந்த சூழலை ஸ்டாலின் தலைமையிலான திமுக இன்னும் அதிகமாக உழைத்து மக்களின் நம்பிக்கையை பெறப்போகிறதா அல்லது தங்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற மமதையில் பல தொகுதிகளை கோட்டை விடப்போகிறதா என்பது தேர்தல் முடிவுகள் கூறி விடும்.