அதிமுக கொடி விவகாரம் ... சசிகலா மீது அமைச்சர்கள் புகார்
சென்னை : சசிகலா தனது காரில் அதிமுக கொடியை கட்டி பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் தண்டனை காலம் முடிந்து ஜனவரி 27 ம் தேதி விடுதலை ஆவார் என கூறப்பட்ட நிலையில், ரீலிஸ் தேதிக்கு 4 நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சசிகலாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பிறகு, கொரோனா தொற்று நீங்கியதால் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.
இதற்கு அதிமுக.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சசிகலா தான் அதிமுக பொதுச் செயலாளர் என்பதால் அவர் கட்சி கொடியை பயன்படுத்தியதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார். இருப்பினும் இதனை எதிர்த்த அதிமுக.,வினர் சேலம் உள்ளிட்ட மாநகர கமிஷனர் அலுவலகத்தில் சசிகலா மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார் சி.வி சண்முகம் ஆகியோர் இன்று நேரில் சென்று புகார் அளித்தனர்.
எதற்காக புகார் :
டிஜிபியிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறுகையில், சசிகலா காரில் அதிமுக கொடியை உபயோகித்த நிலையில், அது தொடர கூடாது என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தோம்.
வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது :
அதிமுக கொடியை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தவிர, மாற்று இடத்தில் இருப்பவர்கள் உபயோகிக்க கூடாது.எங்கள் இயக்கத்திற்கு உரிய கொடியை சசிகலா அம்மையார் பயன்படுத்த கூடாது என்பதற்காக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.
சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை :
சசிகலா அதிமுக உறுப்பினர் கிடையாது; அவர் எப்படி அதிமுக கொடியை எப்படி பயன்படுதலாம்?என கே.பி.முனுசாமி மீண்டும் சசிகலா தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.
அதிமுக தலைவர் யார் :
தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையத்தில் நடந்த வழக்கில், 2017 ல் வெளியான தீர்ப்பில், ஓ பி எஸ் தலைமையிலானது தான் அதிமுக என்று கூறப்பட்டது என தெரிவித்தார்.