தமிழகத்தில் இன்றிலிருந்து தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. 24 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!
சென்னை: தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களை மேலும் முடக்கும் வகையில் தமிழகத்தில் இன்று கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
இதனால் இயல்பாக இருப்பதைவிட வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். இன்றிலிருந்து மே 28ம் தேதி வரை இந்த கத்திரி வெயில் இருக்கும். இந்த 24 நாட்கள் தமிழகம் முழுக்க வெயில் அதிகமாக இருக்கும்.
இதனால் தமிழகம் முழுக்க இன்றிலிருந்து வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். உடலில் இதனால் கதிர்கள் நேராக விழும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும்.
சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. இந்த வெயில் காரணமாக சரும பிரச்சனை, வெயில்கால நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அடிக்கிறது. ஆனால் சென்னையில் இந்த முறை அதிக அளவில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. மாசும் குறைவான அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
மக்கள் ஊரடங்கிற்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே சென்றால் குடை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்திரி வெயிலுக்கு இடையே தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.