ஏப்ரலில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அதிமுக கோரிக்கை - ஒரே கட்டமாக நடத்த திமுக மனு
சட்டசபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை மனு அளித்துள்ளது.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய தொடங்கி உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் தான் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது. வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரம், வாக்குப் பட்டியல் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே அவகாசம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதான செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேமாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பரபரக்கும் தமிழகம்.. முன்கூட்டியே சட்டசபை தேர்தல்? 5 கண்டெய்னர்களில் வந்தாச்சு வாக்குப் பதிவு மெஷின்
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் வந்து சந்திக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசினார்கள். தங்களது கருத்துக்களை மனுவாக அளித்தனர்.
தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகிய இருவரும் சென்றனர். அவர்களும் தி.மு.க.வின் கருத்துக்களை மனுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர் எஸ் பாரதி, தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் விருப்பம். இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தெளிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் ஏற்கனவே பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளோம்.
என்றார்.
அந்த புகார் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்துகொள்ள கேட்டுள்ளோம். குறிப்பாக 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்தை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம். தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்,சட்டசபைத் தேர்தலை ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். முதல்வர் அறிவித்துள்ள ரூ. 2500 பொங்கல் பரிசு ஏழை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.அது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதல்ல என்றும் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.