எல்லோரும் வாங்க.. மா.செ.க்கள் எம்எல்ஏக்களுக்கு ’செக்’ வைக்கும் எடப்பாடி! ஷாக் ஆகிப் போன ஓபிஎஸ் டீம்!
சென்னை : சென்னையில் வருகிற திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என இடைக்கால பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் அதில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரு முக்கிய உத்தரவுகளை எடப்பாடி பழனிச்சாமி அந்த கூட்டத்தில் பிறப்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே பலகட்ட நெருக்கடிகளை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகின்றனர். இருவருமே தனித்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம் மாறி மாறி வரும் நீதிமன்ற தீர்ப்புகள், தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும் இருவருமே தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு ஒன்று.. இப்போது வேறா? வாக்குறுதி என்னாச்சு?- ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஓபிஎஸ் குரல்!
அதிமுக விவகாரம்
குறிப்பாக அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் மாவட்ட செயலாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவில் தாங்கள்தான் உண்மையான உறுப்பினர்கள் என மாவட்ட அளவில் கோஷ்டி அரசியல் முளைத்துள்ளதால் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் திமுகவுக்கு எதிராக வியூகங்களை வகுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
மா.செ.க்கள் கூட்டம்
வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், 2024 மக்களவை தேர்தல், திமுகவினர் போடும் வழக்குகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் நடைபெற்று வரும் சோதனை குறித்த பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அஸ்திரங்கள்
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் குறித்த பேச்சுக்களே இந்தக் கூட்டத்தில் முக்கியமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இரு முக்கிய விவகாரங்களை ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அறிவிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார். அதில் அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது. அநேகமாக நவம்பர் 2 அல்லது 3வது வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணையம்
அடுத்ததாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் தேர்தல் ஆணையத்தை அணுகி ஓபிஎஸ் தரப்பை முற்றிலும் ஓரம்கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி விரைவில் தங்களுக்கு தரப்புக்கு சாதகமான உத்தரவை பெறும் முயற்சியை தீவிரபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஓபிஎஸ் தரப்பை அதிமுகவில் இருந்து 100% வெளியேற்ற எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தாலும் ஓ பன்னீர் செல்வத்தால் ஒன்றுமே செய்ய முடியாது என நம்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தற்போதைய இந்த கூட்டத்தை தனக்கு ஆதரவாக நிலைநிறுத்தம் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.