ஒற்றைத் தலைமை கன்பார்மா? பொதுக்குழு கூடுவது உறுதி.. அழுத்தி சொன்ன பொன்னையன்.. தகிக்கும் அதிமுக
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவும் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் எடப்பாடி வீட்டில் அடுத்தடுத்து நடந்து கொண்டு இருக்கின்றன.

மறுபக்கம் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வருவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. இது நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ஓ பன்னீர்செல்வம் பேசியதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இதனைத்தொடர்ந்து 4வது நாளாக இருதரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வந்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். அதிமுக தலைமை பிரச்னை குறித்து சுமூக தீர்வை காண, தம்பிதுரை ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பொதுக்குழு கூடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், இப்போதைய சூழல் மாறியுள்ளது என்று கூறிய பதில் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தநிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் ஜூன் 23ம் தேதி நிச்சயம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும். அதிமுக ஒற்றைத் தலைமையா என்பது பற்றி கட்சித் தலைமையும், பொதுக்குழுவும் முடிவு செய்யும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். ஒற்றைத் தலைமை என்பது எப்போதும் தவறு கிடையாது. மேலும், பொதுக்குழுவில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications