மேலே இருந்து வந்த "பிரஷர்.." வேறு வழியின்றி பாஜக கூட்டணிக்கு தயாரான எடப்பாடி? பத்திரிகையாளர் மணி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், பாஜக கூட்டணியை நோக்கி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளதாக ஒன்இந்தியா தமிழுக்கு பத்திரிகையாளர் மணி அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதிமுக - தவெக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்று பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக திமுகவுக்கு பணியாற்றுவதாக கூறிய அவர், அதிமுக - தவெக கூட்டணி அமையாது என்று கூறுவதற்கு பிரசாந்த் கிஷோர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்தார். அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவருடன் கைகுலுக்கி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதேபோல் எஸ்பி வேலுமணி சிவராத்திரி விழாவில் அமித் ஷாவுடன் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைக்க பலரும் தவம் கிடக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறிய போதும், அவர் அதிமுகவை கூறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர் மணி பேட்டி
ஆனால் சில நாட்களுக்கு முன்பாக அதிமுக - தவெக கூட்டணி உருவாகும் என்று பேசப்பட்டு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பி சில முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த நேர்காணலில் கருத்து கூறி இருந்தார்.
அதில், தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புகிறது. ஆனால் அதனை பாஜக அனுமதிக்காது. எந்த எல்லைக்கும் சென்று அதிமுகவை பாஜக கூட்டணிக்கு இழுக்கும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், தவெக உடன் கூட்டணிக்கு முயற்சித்து தோல்வியடைந்ததால் தான், எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜக கூட்டணி கதவை திறந்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பிரசாந்த் கிஷோரின் நோக்கம்
இதற்கு பத்திரிகையாளர் மணி பேசுகையில், அவர் எந்த கதவையும் திறக்கவில்லை. அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது, விஜய் அதற்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதேபோல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்று கெடுப்பதற்காக கூட்டணி இல்லை என்று கூறினார்.
திமுகவுக்கு மறைமுக வேலை
தவெக - அதிமுக கூட்டணி இல்லை என்று சொல்வதற்கு பிரசாந்த் கிஷோர் யார்? அதற்காகதான் அடுத்த நாளே தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எங்களின் செய்தி தொடர்பாளர்களால் மட்டுமே சொல்வோம் என்று தெரிவித்தார். 2021ல் திமுகவுக்கு ஆதரவாக நேரடியாக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். அவர் இம்முறை 2026 தேர்தலில் மறைமுக பணியாற்றுகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம்
அதனால்தான் அதிமுக - தவெக கூட்டணி இல்லை என்று அறிவித்தார். அதேபோல் விஜய் உடன் அதிமுக செல்வதற்கு பாஜக எளிதாக அனுமதிக்காது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று கூறினோம். அதுதான் இப்போது நடந்துள்ளது. அதிமுக நம்மை மீறி செல்கிறது. இதற்கு மேல் நம்மால் பிடிவாதமாக இருக்க முடியாது என்ற சூழல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முடிவை எடுக்க எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதிமுகவை விழுங்கும் பாஜக
தொடர்ந்து பாஜகவின் வருகை அதிமுகவுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, அதிமுகவை பாஜக விழுங்கும். தமிழ்நாடு நாசமாய் போகும். அதிமுக - பாஜக கூட்டணி வந்தால், அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். ஆனால் விரும்பவில்லை. பால் தாக்கரே மரணத்திற்கு பின் சிவசேனாவுக்கு என்ன நடந்ததோ, அது அதிமுகவுக்கு நடக்கும்.
பாஜகவின் ரோல்
பாஜக ஒரு கட்சியுடன் உறவு வைத்தால், அந்த கட்சி நாசமாய் போகிறது என்பதே அர்த்தம். அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு பேரழிவை சந்திக்கும். திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு, அடுத்ததாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதில் பாஜகவுக்கு மிகப்பெரிய ரோல் இருக்கும். மீண்டும் 2021 கூட்டணி அமைந்தால், அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக இருக்கும். சொற்ப எண்ணிக்கையிலான சீட் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. அது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications