திமுக கதவை மூடினாலும் தேமுதிகவுக்கு டிமாண்ட் இருக்குதே.. ஜெயக்குமார் பேட்டியை பாருங்க
சென்னை: தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், விஜயகாந்தின் தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில், திமுக இனிமேல் கூட்டணியில் எந்த கட்சியையும் சேர்த்துக் கொள்ளப் போவது இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது. எனவே அதிமுகவுடன் கூட்டணி, அல்லது தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பாஜக தலைவர்கள் வற்புறுத்தலால் தேமுதிகவை அதிமுக கூட்டணி கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அசிங்கமாகப் போய் விடும்.. துரைமுருகன், திமுக தலைமை மீது சுதீஷ் நேரடி பாய்ச்சல்!
இந்த நிலையில் சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் நேற்று திமுக நடந்து கொண்ட விதம் அரசியல் நாகரீகம் இல்லாத வகையில் உள்ளது. தேமுதிகவை இவ்வளவு அசிங்கப்படுத்தும் வகையில் துரைமுருகன் பேசியிருக்க கூடாது.
அதிமுக கூட்டணியில் மொத்தம் 40 விமான டிக்கெட்டுகள் டெல்லிக்கு எடுக்கப்பட்டாகிவிட்டது. போர்டிங் பாஸ் மட்டுமே பாக்கி. அதை வாங்கிக்கொள்ள தேமுதிக வந்துவிடும் என்பது உறுதி. எங்கள் கூட்டணியில் 40 பேரும் டெல்லிக்கு (நாடாளுமன்றம்) போகப்போகிறோம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.