அதிமுக எம்எல்ஏக்கள்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிச்சாமி..அனல் பறக்குமா?
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொன்விழா கொண்டாடப்பட உள்ள நேரத்தில்
பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை தீராத தலைவலியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் குடைச்சலை கொடுத்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தடையாக உள்ளது.

பொதுச்செயலாளர்
என்னதான் ஓபிஎஸ் பிரச்சினை செய்தாலும் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக கூறி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறி தனது ஆதரவு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் தான் வரும் 10ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாளிப்பது எப்படி
கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் வழக்குகள் , ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல் ஆகிய விஷயங்கள் குறித்து முக்கிய எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

என்னென்ன திட்டம்
இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் அன்று 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தால் போதும். அதற்கேற்ப கட்சி விதிகளில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு விட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு விடுவார்.

உற்சாக வரவேற்பு
இந்த விஷயங்கள் அனைத்தையும் அக்டோபர் 17ஆம் தேதிக்கு முன்பாக முடித்துவிட ஆலோசித்து வருகின்றனர். அதிமுகவின் பொன் விழா ஆண்டு நிறைவு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். இதில் எடப்பாடிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்க தற்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டனர். அதற்கு முன்னோட்டமாகவே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications