10 நாளில் 3 பேர்..நீட்டுக்கு அஞ்சி தற்கொலை வேண்டாம்! பாமக அன்புமணி வேண்டுகோள்! அரசுக்கு ஒரு கோரிக்கை
சென்னை : நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
மருத்துவபடிப்புகளில் சேர்வதற்காக நாளை நடைபெறும் நீட் தேர்வுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் ரயில் நிலையம் அருகே நடராஜன்- உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்ற இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், தோல்வி அடைந்த இந்நிலையில், நாளை நடக்கவுள்ள இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மாணவி நிஷாந்தி தயாராகி வந்தார்.

நீட் தற்கொலை
வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வுக்காக நன்றாக படித்துள்ளேன். ஆனால் தோல்வி அடைந்து விடுவேனோ என பயமாக உள்ளது எனவும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்திருந்தார். தமிழகம் முழுவதும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

நீட் தேர்வு அச்சம்
அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள். நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 10 நாட்களில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி என மூவர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும். அதே நேரத்தில் நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications