ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் ஆந்திரா.. தமிழகத்தில் எப்போது.. அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்தியா முழுமைக்கும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாமக இளைஞரனி தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.
ராமதாஸ் ஆரம்பத்துல எப்படி இருந்தார் தெரியுமா.. கால் தவறியது எங்கே.. திருமாவளவன் ஆவேச பேச்சு
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு எனவும், இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.