செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்தில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகை புரிந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவைப் போலவே, செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த காவலரின் உடலை மீட்ட போலீசார், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. தற்கொலைக்கு முழுமையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications