"சதிகலாவாக" சசிகலாவை சித்தரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்.. அப்போ "தர்மயுத்த" ஓபிஎஸ் பல்டியடித்தது ஏன்?
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா உயிரோடு போயஸ்கார்டனுக்கு திரும்பாமல் சடலமாகவே கொண்டு வரப்பட்டார். இதற்குக் காரணம் யார் என்பது இன்றைக்கு ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கூடவே இருந்த சசிகலா செய்த சதிகள் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசும் போது, நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக என்ற மாபெரும் கட்சி 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நீடித்து இருக்கும் என்று கர்ஜனையுடன் பேசினார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று மெட்ரோ ரயில் நிலையம் தொடக்க விழாவில் பங்கேற்ற ஜெயலிதா சற்று சோர்வுடனேயே இருந்தார். அவரது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்தது. ஆனாலும் அவரது பேச்சில் அதே கம்பீரம் இருந்தது. அன்றைய தினம் இரவு உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுமுதலே அனைத்து சம்பவங்களும் ரகசியமாக்கப்பட்டன. ஊடகங்களுக்கு சொன்னது எல்லாமே உண்மை நிகழ்வுகள் இல்லை என்று இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

அப்பல்லோ அறிக்கை
காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறுதியில் சடலமாகவே அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

யார் குற்றவாளிகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக சிகிச்சை இல்லை
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா
கடந்த 2012ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை. அதனைத் தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனைத் தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். ஆனால், சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார். அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா எம்பியாக்கினார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர்களைத் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் ஜெயலலிதா பதவி அளிக்கவில்லை.

வெளியேற்றிய ஜெயலலிதா
கடந்த 2011ஆம் ஜெயலலிதா முதல்வரானதும் சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியதுடன் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுக்க 10 மாதங்களில் அவரை மட்டும் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா அனுமதித்தார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா கட்சியிலும், வீட்டிலும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் சுமூக உறவு இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் எப்போது
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா உயிரிழந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஞ்சியோ சிகிச்சையை தடுத்த சசிகலா
சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை.

ஓபிஎஸ் அடித்த பல்டி
ஜெயலலிதாவை மீண்டும் உயிரோடு போயஸ்கார்டனுக்கு கொண்டு வரக்கூடாது என்று வேண்டும் என்ற சசிகலா சதி செய்து சிகிச்சைகளை தடுத்தது போல தெரிவதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதே நேரத்தில் எந்த நோக்கத்திற்காக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினாரோ அவரே ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஆஜரான போது சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக நான் ஆணையம் அமைக்கவேண்டும் என தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருந்த ஓ.பன்னீர் செல்வம், அதையே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையின் போதும் கூறினார்.

ஓபிஎஸ் வாக்குமூலம்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரமும் தெரியாது என்று கூறிய அவர் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சொந்த ஊரில் இருந்த போதுதான், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அறிந்துகொண்டேன் என்று பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.

அத்தனையும் பொய்யா ஓபிஎஸ்
சசிகலாவின் அழைப்பின் பேரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா வந்ததாகவும் அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தர்மயுத்தம் தொடங்கியது முதல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரை, தான் பேசியது அனைத்தும் சரியானதே எனவும் ஓபிஎஸ் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசயங்களை உற்று நோக்கினால் சரியான சிகிச்சை அளிக்காமல் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் மூல காரணமாக இருந்திருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது.

சதி லீலாவதியா சசிகலா
அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் ஜெயலலிதா இருந்த போது கட்சியினர் எதிரில் நிற்க கூட அஞ்சி நடுங்குவார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் எப்போது பதவி பறி போகும் என்று தூக்கத்தை தொலைத்திருப்பார்கள். காணும் இடம் எங்கும் எதிரிகளே இல்லை என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பேசியிருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு வீட்டிற்குள்ளேயே இருந்த மறைமுக எதிரியை கணிக்க தவறிவிட்டார் என்றுதான் அதிமுகவினர் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். தியாகத்தலைவி என்று சசிகலாவை கூறி வருகின்றனர். அவரோ சதி லீலாவதியாக செயல்பட்டிருக்கிறார் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications