விட்டு விட்டு வீசும் காற்று.. விடாமல் பெய்யும் மழை! கரையை கடக்கும் மாண்டஸ்! 28 மாவட்டங்களுக்கு லீவ்
சென்னை: மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி கடுமையான சூறாவளியாக மெல்ல நகர்ந்து வரும் மாண்டஸ், இன்று வலுவிழந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே சூறாவளியாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் கடலோர மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்- சென்னையில் விடிய விடிய மழை- மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் சீறும் கடல் அலைகள்
கரையை கடக்கும் புயல்
இந்த மாண்டஸ் சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மேற்று-வடமேற்கு திசையில் சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே மையம் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து சரியாக சுமார் 320 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டிருக்கிறது. இது இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கரையை கடக்கும் போது சுமார் 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
அதாவது, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி என 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் மாநகராட்சி பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எம்ஜிஆர் பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெற இருந்த நிலையில் இந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எப்போது
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதாவது தெற்கு ஆந்திரா முதல் புதுச்சேரி வரை உள்ள பகுதிகளில் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை சுமார் 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்று இரவு தொடங்கினாலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் பொன்னேரி தொடங்கி, ஆற்காடு வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்த அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்கள் சில வெட்டப்பட்டுள்ளன. அதேபோல புயல் கரையை கடக்கும் நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
போக்குவரத்து
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் என 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் சுரங்கப்பாதைகளை மாநகராட்சி சிசிடிவி கேமிராக்கள் மூலம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அதேபோல ஒவ்வொரு வார்டிலும் அவசர தேவைக்காக ஒரு இலகு ரக வாகனமும் 10 பணியாளர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 805 மோட்டார் பம்புகளும், பொதுமக்களை தங்க வைக்க 169 நிவாரண மையங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.