அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் 97% நிறைவு! தீயாய் நடக்கும் வேலை! துரைமுருகன் தனிக்கவனம்!
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் 97% நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அத்திக்கடவு அவினாசி திட்டம்
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுகள் பற்றி அதிகாரிகளிடம் கேள்விக் கணைகளை வீசினார். இவர் இவ்வாறு கேட்பார் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த உயர் அதிகாரிகள் கையில் விவரங்களோடு வந்திருந்தனர்.

97% பணிகள் நிறைவு
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகளில் தற்சமயம் சுமார் 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 1065 கி.மீட்டரில் சுமார் 1033 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகளை விரைந்து முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காரணத்தை விளக்கினர். இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என உயர் அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்தனர்.

ஜனவரி இறுதிக்குள்
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர். ஆனால் மழைக்காலம் வருவதால் இந்தப் பணிகள் 2023 பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

சரபங்கா வடிநிலம்
அதற்கு பதிலளித்த அவர்கள், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாகவும் மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை பொறுத்தவரை கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications