கையில் பட்டாகத்தி..மிரட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்..அண்ணாநகரில் அட்டூழியம்..நடவடிக்கை பாயுமா?
சென்னை: அண்ணா நகர் பகுதியில் மீண்டும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அரங்கேறி வருகிறது. கையில் பட்டாகத்திகளுடன் வலம் வரும் ரவுடிகள் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர். நேற்றிரவு ஒரே இடத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சென்னை, அண்ணா நகர். திருமங்கலம், அமைந்தக்கரை பகுதியில், செயின்பறிப்பு, மொபைல்போன் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, அண்ணா நகர் மாவட்ட எல்லைக்குள் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்கு உள்ள நபர்கள், ரவுடிகள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, அண்ணா நகரில் வழிப்பறி, செயின்பறிப்பு தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் அச்சத்தைப்போக்க ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
இறங்கினர்.
அவர்களில், ஜாமீனில் வெளியில் உள்ளவர்கள், சிறையில் இருப்பவர்கள் என தனியாக பிரித்து, கண்காணிக்கப்பட்டடனர். ஜாமீனில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாதவர்கள் குற்ற வழக்கில் ஈடுபடும் ரவுடிகளை கண்டறிந்து, உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கும்படி உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு, அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையிலும் ரவுடிகள் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அடங்கவில்லை. மோட்டார் சைக்கிளில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அண்ணா நகரில் ஒரே தெருவில் 2 பெண்களை குறி வைத்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் அவர்களை கீழே தள்ளி செயினை பறித்த சம்பவம் அரங்கேறியது.
சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையம் இருக்கும் பகுதியில் உள்ளது ஒய் பிளாக். இங்கு சாலையில் நடந்து சென்ற 2 பெண்களை குறி வைத்து மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்கள் இருவர் அடுத்தடுத்து செயினை பறித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் நேற்றிரவு கையில் பட்டாகத்தியுடன் ரவுடிகள் வலம் வந்து மக்களை அச்சுறுத்தினர். வாகன ஓட்டிகளை மிரட்டி பணத்தை பறித்துச்சென்றனர். டீக்கடையில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி செல்போன்களை பறித்து சென்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.