கூட்டணியில் இருப்பதால் அனைத்தையும் ஏற்க முடியாது.. அதிமுகவுக்கு ‛மெசேஜ்’ அனுப்பிய அண்ணாமலை..பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடனாக கூட்டணியில் பாஜக நீடித்து வருகிறது. இருப்பினும் கூட்டணியில் இருப்பதையும் அனைத்தையும் ஏற்க முடியாது என அதிமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மெசேஜ் அனுப்பி உள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் திண்டுக்கல்லில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடியை இருவரும் ஒன்றாக நின்று வரவேற்றனர்.
இதனை எடப்பாடி பழனிச்சாமி சற்றும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இங்கு எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை.
அதிமுக அரசு வஞ்சித்தது.. அதையே நீங்களும் தொடர்வதா? 'பச்சைத் துரோகம்’ - பாய்ந்து வந்த சீமான்!
எடப்பாடி பழனிச்சாமி கருத்து
இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛அதிமுக, பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுக என்பது தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக தேசிய கட்சி. அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை'' என காட்டமாக தெரிவித்தார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பாஜகவை கழற்றிவிட முடிவு?
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சுக்கு பின்னணியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழற்றிவிட அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னோட்டமாக தான் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இதுதொடர்பாக யூகங்கள் இணையதளங்களிலும் றெக்கை கட்டி பறக்க தொடங்கின.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக தலைவர்கள் இடையேயான பேச்சின் ஆடியோ விவகாரம் உள்பட பாஜக, அதிமுக இடையேயான உறவு பற்றி வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்தார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:
ஏன் என தெரியவில்லை .
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கிறது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பற்றி நான் கருத்து கூற முடியாது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்என் ரவியை சந்திப்பது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் ஏன் ஆளுநரை சந்திக்கிறார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
வரம்புக்கு அப்பாற்பட்டது
இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டணியை பாஜகவின் நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்து வருகிறது. அந்த குழு தான் கூட்டணியில் யார் உள்ளனர், எந்த மாதிரியான தலைவர்கள் உள்ளனர்கள் என்பதை முடிவு செய்கின்றனர். இதனால் கூட்டணி பற்றி கூறுவது என்பது எனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது.
அதிமுகவுடன் தொடரும் கூட்டணி
தற்போது வரை பாஜக ஒரு கட்சியாக அதிமுகவுடன் தொடர்ந்து வருகிறோம். தேசிய ஜனநாயககூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவுடன் எந்த முரண்பாடும் இல்லை. பிரதமர் மோடி வந்தபோது அதிமுகவில் இருந்து வந்து பார்த்தனர். டெல்லி சென்று பார்க்கின்றனர். ஜனாதிபதி பிரிவு உபசார விழாவில் அழைத்து இருந்தனர். இது எல்லாம் உங்களுக்கான சாட்சி.
2024 நிலவரம் தெரியாது
அதேநேரத்தில் 2024ல் கூட்டணி எப்படி இருக்கும் என்பது தெரியாது. மாநில தலைவராக பாஜக இத்தனை இடங்களில் நிற்க வேண்டும் என விரும்புகிறேன். இதுபற்றி கட்சி தலைவர்கள், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்களிடம் கூறுவேன். கட்சிக்கு இவ்வளவு ஓட்டு உள்ளது. இவ்வளவு இடங்களில் நிற்க வேண்டும் என எடுத்து கூறுவேன். கட்சி சார்ந்த விஷயங்களை கூறுவோம். கூட்டணி தொடர்பாக கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
அனைத்தையும் ஏற்க முடியாது
என்னை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. இதை காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. திமுக கூட்டணியில் இருப்பதனால் அனைத்தையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. இதை நானும் கூறுகிறேன். அதேவேளையில் பாஜக தலைவராக ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். கட்சியின் வளர்ச்சி விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளது. இன்னும் சின்ன சின்ன விஷயங்களில் உள்ள பிரச்சனைகள், கூட்டணி அமைப்பது, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் உள்ளிட்டவற்றை இன்றைக்கே முடிவு செய்ய முடியாது என்பது தான் எனது கருத்து. தற்போதைய சூழலில் கூட்டணியின் தன்மையை முடிவு செய்ய முடியாது'' என்றார்.