பாரத் ஜோடோ யாத்திரை.. கன்னியாகுமரி சென்றடைந்த ராகுல், ஸ்டாலின்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: ‛பாரத் ஜோடோ யாத்திரை'எனும் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயண நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சென்னையில் இருந்து விமானத்தல் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றடைந்தார். இதேபோல் முதல்வர் ஸ்டாலினும் கன்னியாகுமரி சென்றடைந்துள்ளார். இருவருக்கும் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும் அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்க உள்ளது.

குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்
இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் துவங்கி 150 நாட்களுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரை சென்றடைகிறது. இதற்காக நேற்று ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு சென்றார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர்தூவி வணங்கினார். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சிறிது நேரம் அங்கு அமர்ந்து அமைதியாக தியானம் செய்தார்.

கன்னியாகுமரி சென்ற ராகுல்
பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு ராகுல் காந்தி திரும்பினார். அதன்பிறகு காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டார். திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தார். அங்கும் அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

துவக்கி வைக்கும் ஸ்டாலின்
இந்த நடைப்பயணம் இன்று மாலை 5 மணியளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவு வாயிலில் இருந்து துவங்க உள்ளது. கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் தேசியக் கொடி வழங்கி துவங்கி வைக்கிறார். இதற்காக தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்திறங்கிய முதல்வர் முக ஸ்டாலினும் கன்னியாகுமரி சென்றுள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திர பாபு இன்று காலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications