வணக்கத்திற்குரிய "வாத்தியார்".. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மறக்க முடியாத எம்ஜிஆர்!
இன்று எம்ஜிஆரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது
சென்னை: எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம், 30 வருடங்களுக்கு மேலாகியும் தமிழக மக்களால் இன்றும் உச்சரிக்கப்பட்டு வருகிறது.. இதற்கு காரணம், தன் உதிரத்தையே வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், எம்ஜிஆர் நிரந்தரமாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தையின் மறைவுக்கு பிறகு வறுமைக் கோட்டுக்கு கீழே வாழவேண்டிய அவலத்திற்கு ஆளாகி, பிற்காலத்தில் ஏராளமாக சம்பாதித்து பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று!
இவரது அரசியல் பணி, வள்ளல் தன்மையை தமிழகம் கண்கூடாக பார்த்தது எனினும், திரைப்பட பார்வையில் எம்ஜிஆரின் பார்வையை பகுத்தறிந்து பார்ப்பது குறைவுதான் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் எம்ஜிஆரின் சினிமாக்களை கொண்டே அவரது இந்த பிறந்தநாளை நினைவுகூர்வதும் வணக்கத்திற்குரிய மரியாதையே!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் இன்று.. தமிழக அரசு சார்பில் மரியாதை..!
நிறம்
ஒரு நடிகராக இந்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.. எம்ஜிஆர் என்றாலே சுறுசுறுப்பு.. எம்ஜிஆர் என்றாலே ரோஜாப்பூ நிறம்... எம்ஜிஆர் என்றாலே உற்சாகம் பொருந்திய ஒரு சிரிப்பு.. எம்ஜிஆர் என்றாலே தான தர்மங்கள் என்று பதிந்து போய்விட்டது. பெரியார் அண்ணாவின் சமூக கருத்துகளை மக்களிடம் விதைத்து, அதை கடைசி வரை கடைப்பிடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்... நடிப்பை ஒரு தொழிலாக கருதாமல், தவமாக நினைத்தார்..
மரியாதை
அதனால், ஏழைகள் மீது கருணையும், தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதையும், பெண்கள் மீது பக்தியும், தேசத்தின் மீது பிடிப்பும், ஈடுபாடும் அவரிடம் எல்லா கேரக்டர்களிலும் காணப்பட்டது. இவரது சினிமா வாழ்க்கையும், நிஜவாழ்க்கைக்கும் பெரிய அளவுக்கு வித்தியாசம் இல்லை.. இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்தது.. பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார்.. அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராகவும் வலம் வந்தார்..
அரசியல்
இந்த சினிமா வாழ்வுதான், அவரது அரசியலுக்கு அடித்தளமாக இருந்தது.. பேரறிஞர் அண்ணா மீது அளவு கடந்த பற்றுக் கொண்டதன் காரணமாகவே திமுகவில் இணைந்தார்.. பிறகு ஒருகட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, தனியாக சொந்தமாக அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.. அப்போது முதலே இவருக்கு வெற்றிகள்தான் குவிந்தது.. தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் அலங்கரித்தவர்.. உடன்பிறப்புகளே என்று அழைத்து லட்சோப லட்ச தொண்டர்களை தன்வசப்படுத்தியவர்.
சத்துணவு
முதல்வராக இருந்தபோது எத்தனையோ சிறப்பான திட்டங்களை அமல்படுத்தியவர்.. இதில் இன்றளவும் போற்றத்தக்கது. ஏழைகளின் பசியை போக்கிய சத்துணவு திட்டம்தான்.. இந்த சத்துணவு திட்டத்தினால் லட்சக்கணக்கான குழந்தைகள் பசியாறினர்.. இன்றும்கூட யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும், "மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம்" என்று சொல்லி கொண்டுதான் வருகிறார்கள்.. அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஒரு தாரக மந்திரமாக இருந்து வருகிறார்.
வாக்கு வங்கி
அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றிருக்கிறார் எம்ஜிஆர்... காலத்தையே ஒருசிலர் வெல்வார்கள்.. ஆனால் காலத்தையும், மக்களையும் ஒருசேர வென்றவர் எம்ஜிஆர் மட்டுமே.. தமிழகத்தையும் எம்ஜிஆரையும் அவ்வளவு சீக்கிரம் பிரித்துவிட முடியாது.. இன்னும் பல காலங்கள் கடந்தாலும், எம்ஜிஆர் என்ற 3 எழுத்து மந்திரமும் இங்கு ஒலித்து கொண்டேதான் இருக்கும்..!