பில்கிஸ் பானு வன்கொடுமை..குற்றவாளிகள் விடுதலை..அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள்..குஷ்பு
சென்னை: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை விடுவித்தது நீதித்துறைதான் என்று கூறியுள்ள குஷ்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும், அவரது குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. அந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அந்த கும்பல் அவரைத் தாக்கியதோடு மட்டுமின்றி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயது குழந்தை உள்பட 7 பேரையும் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

குற்றவாளிகள் விடுதலை
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தங்களின் தண்டனையை குறைக்க அல்லது ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பவம் குஜராத்தில் நடந்ததால் இதுகுறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடும் கண்டனம்
பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களின் விடுதலைக்காக பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இதை விட பயங்கரமான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அதே நேரத்தில், பில்கிஸ் பானோவுக்கு நீதி கேட்ட தீஸ்தா செடல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வரை எந்த வழக்கிலும் தண்டனை பெறவில்லை, ஆனால் சதியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களை ஆதரிப்பதற்காக பாஜகவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அழகிரி கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் மனு
குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்த அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை எதிர்த்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுபாஷினி அலி, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிக்குமார் அமர்வு மனுவை விசாரிக்க உள்ளது.

குஷ்பு ட்வீட்
இதனிடையே பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட பெண்மணிக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் விடுவிக்கப்படக்கூடாது. அவ்வாறு விடுவிக்கப்பட்டால், அது பெண்களுக்கும், மனிதநேயத்துக்கும் அவமதிப்பாகும். பில்கிஸ் பானு அல்லது வேறு எந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அரசியல், சித்தாந்தம் எல்லாவற்றையும் கடந்து அவளுக்கு ஆதரவும், நீதியும் கிடைக்க வேண்டும் என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஷ்புவிற்கு கேள்வி
குஷ்புவின் ட்வீட்டிற்கு ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். பலாத்கார குற்றவாளிகளை விடுவித்த கட்சி/அரசாங்கத்தின் பெயரை ஏன் குறிப்பிடாமல் நிறுத்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சித்தாந்தத்தை ஆதரிக்கும் கட்சியில் நீங்கள் ஏன் இன்னும் இருக்கிறீர்கள்? என்றும் ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள்
அந்த ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, நான் நிர்பயாவை அனுமதித்த கட்சியில் இருந்தேன். அதைவிட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதித்துறைதான். ஆனால், பாஜக மீதும், நமது பிரதமர் மீதும் நீங்கள் கொண்ட வெறுப்பு, தொனியில் பேச உங்களைத் தூண்டியது என்று நினைக்கிறேன். உங்களுக்கு என் அனுதாபங்கள் மேலும் அரசியல் வேண்டாம் என்றேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள் என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு பதிலளித்துள்ளார். பாஜகவிற்கு எதிராக குஷ்பு ட்வீட் செய்ததாக பலரும் கூறிய நிலையில் இந்த விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications